Last Updated : 05 Nov, 2017 09:39 AM

 

Published : 05 Nov 2017 09:39 AM
Last Updated : 05 Nov 2017 09:39 AM

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர்களுடன் களமிறங்கும் முதல்வர் யோகி

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் இணைந்து தீவிரப் பிரச்சாரம் செய்யவுள் ளார்.

உ.பி.யில் நவம்பர் 22, 26, 29 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு இத்தேர்தல் சவாலாகியுள்ளது. இத்தேர்தல் முடிவு, 2019 மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதில் பாஜக அதிக கவனம் செலுத்துகிறது. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும்பாலும் மாநில முதல்வர்கள் களமிறங்குவது இல்லை. இதற்கு மாறாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் இத்தேர்தலில் நேரடியாகக் களமிறங்க உள்ளார். உ.பி.யின் 16 மாநகராட்சிகளிலும் அவர் பிரச்சாரம் செய்யவுள்ளார். இவருடன் துணை முதல்வர்கள் தினேஷ் சர்மா, கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் அமைச்சர்களும் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் உ.பி. பாஜக நிர்வாகிகள் தரப்பில் கூறும்போது, “வழக்கமாக உள்ளாட்சி தேர்தல்களில் உள்ளூர் பிரச்சினைகளின் அடிப்படையில் போட்டி இருக்கும். ஆனால் இதை மாற்றி, மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை போல பிரச்சாரப் போட்டியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. இத்தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றுவதே எங்கள் நோக்கம் ஆகும். இதற்காக எங்களின் 312 எம்எல்ஏக்கள் மற்றும் 67 எம்.பி.க்களுக்கு அவரவர் பகுதியில் பிரச்சாரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

இந்தத் தேர்தலிலும் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்கள் வாரிசு மற்றும் உறவினர்களை களமிறக்க முயன்று வருகின்றனர். மற்ற கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்ட நிலையில், பாஜக மட்டும் தாமதித்து வருகிறது. இத்தேர்தலில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிடுகின்றன. இவற்றில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் முதல்முறையாக தங்கள் சின்னங்களில் போட்டியிடுகின்றன. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் உ.பி. உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த இக்கட்சி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை.

எனவே கடும் போட்டிக்கு உள்ளாகிவிட்ட உள்ளாட்சித் தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரும் நேரடியாக களமிறங்கிப் பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 1-ல் வெளியாகவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x