Published : 30 Oct 2017 12:19 PM
Last Updated : 30 Oct 2017 12:19 PM

ஆதார் எண் இணைப்பு வழக்கு: மேற்குவங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு மனு தாக்கல் செய்தது பற்றி உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது.

அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளைப் பெற ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆதார் எண் இணைப்பிற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை உச் சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , தன்னுடைய செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு உட்பட, ஆதார் கட்டாய உத்தரவை எதிர்த்து அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.

இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ஒரு சட்டத்திற்கு எதிராக மாநில அரசு பிரிவு 32ன் கீழ் எவ்வாறு ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? அடிப்படை உரிமை பாதிக்கப்படும்போது குடிமக்கள் இந்தப் பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும். ஆனால் மாநில அரசு இந்தப் பிரிவின் கீழ் அணுக முடியாது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுமானால் குடிமகள் என்ற அடிப்படையில் இந்தப் பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். மத்திய அரசை எதிர்த்து இந்தப் பிரிவின் கீழ் மாநில அரசு வழக்கு தொடர்ந்தால் நாளை மத்திய அரசும் மாநில அரசுகளின் மீது வழக்கு தொடர ஏதுவாகி விடும்.

இவ்வாறு கூறினர்.

இதையடுத்து மனுவை திருத்திக் கொள்வதாக வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார்.

இதனிடையே, மொபைல் போனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x