Published : 23 Sep 2017 09:42 AM
Last Updated : 23 Sep 2017 09:42 AM
பாரதிய ஜனதாவுக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவுசெய்த தனது சமையல்காரரை மத்திய அமைச்சர் ஒருவர் பணியிலிருந்து நீக்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டம், சுமேர்பூர் தாலுக்கா, கிவாண்டி கிராமத்தை சேர்ந்தவர் சைன்சிங் தியோரா (37). இவர் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரியின் சமையல்காரராக டெல்லியில் 19, தீன்மூர்த்தி சந்தில் உள்ள அரசு குடியிருப்பில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் சைன்சிங் தனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார். பாஜகவின் சின்னமான தாமரை மலருடன் இடம் பெற்ற அந்தப் பதிவில், ‘நாம் செய்த தவறு தாமரையை தேர்ந்தெடுத்தது’ என்று குறிப்பிட்டிருந்தார். இது ஆயிரக்கணக்கானவர்களால் முகநூலில் ஷேர் செய்யப்பட்டது. இதைப் படித்த சைன்சிங்கின் சக பணியாளர்கள் சிலர், இதுபற்றி மத்திய அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பதிவு வாட்ஸ்அப்பிலும் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வந்ததாகவும், ஏதோ ஒரு வேகத்தில் அதை தானும் முகநூலில் பதிவிட்டிருந்ததாகவும் அமைச்சரிடம் சைன்சிங் ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு தனது தவறை உணர்ந்து அப்பதிவை உடனடியாக நீக்கி விட்டதாகவும் அமைச்சரிடம் கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்காத சவுத்ரி, “எனது சமையல்காரர் இப்படி என் கட்சிக்கு எதிராக எழுதினால் நான் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து சைன்சிங் பணியில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.
இதுபற்றி சவுத்ரி அலுவலகப் பணியாளர்களிடம் விசாரித்தபோது, அதன் காரணத்தை கூற மறுத்தனர். தனது வீட்டில் யாரை பணியில் வைத்துக்கொள்வது என்பது அமைச்சரின் தனிப்பட்ட விருப்பம் என்றனர்.
சவுத்ரி, ராஜஸ்தானின் பாலி தொகுதி எம்.பி. ஆவார். இதன் அருகிலுள்ள ஜோத்பூர் தொகுதி பாஜக எம்.பி.யும் மத்திய வேளாண் துறை இணை அமைச்சருமான கஜேந்தர்சிங் ஷெகாவாத் இவரது நண்பர் ஆவார்.
ஷெகாவத்திடம் இதற்கு முன் சைன்சிங் பணியாற்றி வந்தார். அப்போது ஷெகாவத் வீட்டில் விருந்து உண்ட சவுத்ரி, சைன்சிங்கின் சமையலை பாராட்டியுள்ளார். மேலும் 8 ஆயிரம் சம்பளம் பெற்றுவந்த சைன்சிங்கை, இரு மடங்கு சம்பளம் தருவதாகக் கூறி தன்னுடன் அழைத்துக் கொண்டார். தற்போது, முகநூல் பதிவால் இருவரிடமும் பணி இழந்து நிற்கிறார் சைன்சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT