Published : 23 Sep 2017 09:42 AM
Last Updated : 23 Sep 2017 09:42 AM
அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தை பராமரிக்க இரண்டு நீதிபதிகளை பார்வையாளர்களாக அலகாபாத் உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலத்தை பராமரிக்கவும் பார்வையாளர்களாக இருந்து அதன் தற்போதைய நிலை பற்றி 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்கவும் 2003-ம் ஆண்டு மாவட்ட நீதிபதிகள் டி.எம்.கான், எஸ்.கே.சிங் ஆகிய இரண்டு பேரை பார்வையாளர்களாக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இதில் ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டார். மற்றொருவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து புதிய பார்வையாளர்களை நியமிக்குமாறு கடந்த 11-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பஸ்தி மாவட்ட கூடுதல் நீதிபதி இர்பான் அகமது, பைசாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி அமர்ஜீத் திரிபாதி ஆகியோரை பார்வையாளர்களாக அலகாபாத் உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
இதுகுறித்து பைசாபாத் மாவட்ட ஆணையரும் பிரச்சினைக்குரிய நிலம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்டவருமான மனோஜ் மிஸ்ரா கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி புதிய பார்வையாளர்களாக மாவட்ட நீதிபதிகள் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் இரண்டு பேரும் தங்கள் பணிகளை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குவார்கள்’’ என்று தெரிவித்தார்.
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கும் என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT