Last Updated : 21 Sep, 2017 08:20 AM

 

Published : 21 Sep 2017 08:20 AM
Last Updated : 21 Sep 2017 08:20 AM

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணி: செல்லாது என தெரிந்தே பிறப்பித்த உத்தரவு

தமிழகத்தில் ஆளும் கட்சியின் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருப்பது, செல்லாது என தெரிந்தே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என அதிமுக எம்.பி.க்கள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் கே.பழனிசாமியை பதவி நீக்கம் செய்யக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தமிழக ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து சட்டப்பேரவையில் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் திமுக வலியுறுத்தியது. மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. இதனால், பழனிசாமி அரசுக்கு நெருக்கடி உருவானது. இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தவறானது மற்றும் செல்லாது என பல்வேறு தரப்பிலும் கருத்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் சபாநாயகர் நடவடிக்கையின் பின்னணி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிமுக எம்.பி.க்கள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “சபாநாயகர் உத்தரவு செல்லாது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு விடும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை சென்று, முடிவுக்கு வருவதற்குள் எங்களுக்கு 6 மாதம் முதல் ஓராண்டு வரை கால அவகாசம் கிடைத்துவிடும். இதற்கு முன்பாக கூடும் சட்டப்பேரவையில் நாங்கள் தற்போதுள்ள எம்எல்ஏக்களுடன் வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெறுவோம். நீதிமன்ற உத்தரவு வருவதற்குள் 18 எம்எல்ஏக்களையும் சரிகட்டுவோம். பிறகு கட்சியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மன்னிப்பு அளித்து தகுதிநீக்கத்தை ரத்து செய்து விடுவோம்” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை பொது நண்பர்கள் மூலம் ரகசியமாகத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்துடன் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சியும் நடந்து வருகிறது. சின்னம் கிடைத்து விட்டால் 18 எம்எல்ஏக்களும் தாங்களாகவே திரும்பி விடுவார்கள் என்பது பழனிசாமி அரசின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க மறுத்துள்ளது. இது, சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவின் பின்னணிக்கு சாதகமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x