Published : 20 Sep 2017 10:34 AM
Last Updated : 20 Sep 2017 10:34 AM

முதலில் நீங்கள் இறைச்சி சாப்பிடுகிறீர்கள் பிறகு இறைச்சி உங்களை சாப்பிடுகிறது: மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி

இறைச்சியை சாப்பிடுவதால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

‘இறைச்சி கொல்கிறது’ என்ற தலைப்பில் மயாங்க் ஜெயின் என்பவர் தயாரித்துள்ள குறும்படம் டெல்லியில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. இந்த விழாவில் மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், இறைச்சி சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உடல் சைவ உணவை மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியது. இந்த இயற்கை விதியை மீறி நாம் இறைச்சி சாப்பிட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

நாள்தோறும் இறைச்சி சாப்பிட்டால் உங்கள் உடல் பலவீனமாகிவிடும். இறைச்சி சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடியாக மரணம் நேரிடாது. ஆனால் அது உங்கள் உடலை மிகவும் பலவீனப்படுத்திவிடும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், முதலில் நீங்கள் இறைச்சியை சாப்பிடுகிறீர்கள். பிறகு இறைச்சி உங்களை சாப்பிடத் தொடங்கி விடும். மருத்துவக் கல்வியில் ஒவ்வொரு மாணவரும் 5 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உணவியல் குறித்து சில மணி நேரங்கள் மட்டுமே பாடம் நடத்தப்படுகிறது. மருத்துவக் கல்வியில் உணவியலும் ஒரு முக்கிய பாடம். அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் மேனகாவின் கருத்துக்கு ஆதரவாக எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவர் ரமேஷ் பிஜ்லானி கூறியபோது, ஆடு, மாடு, கோழிகளுக்கு நோய்த் தடுப்பூசி, ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுகின்றன. அந்த விலங்குகளின் இறைச்சி சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல. விலங்குகளுக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்துகள் மறைமுகமாக மனிதர்களின் உடலில் சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x