Last Updated : 19 Sep, 2017 11:18 AM

 

Published : 19 Sep 2017 11:18 AM
Last Updated : 19 Sep 2017 11:18 AM

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது: முன்னாள் தேர்தல் அதிகாரி கே.ஜே.ராவ்

 

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என மத்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் அதிகாரி கே.ஜே.ராவ் கருத்து கூறியுள்ளார். இதற்கு நீதிமன்ற உத்தரவு அமலில் இருக்கும் போது எதையும் செய்ய முடியாது என சுட்டிக் காட்டியுள்ளார்.

இது குறித்து 'தி இந்து'விடம் பேசிய ராவ் கூறியதாவது: ''நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த திமுகவின் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இதில், வரும் செப்டம்பர் 20 வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி சட்டப்பேரவையும் செப்டம்பர் 20 வரை கூட்டவே முடியாது.

இதுபோல், சட்டமன்றம் குறித்த வழக்கு நடைபெற்று வரும் போது, அதன் மீது நீதிமன்றம் இட்ட உத்தரவு அமலில் இருக்கும் சபாநாயகர் புதிதாக எதையும் செய்ய முடியாது. இதில் அவர் போடும் புதிய உத்தரவுகள் எதுவாக இருந்தாலும் அது செல்லாது என்றாகி விடும். இந்த நிலையில், திமுக உயர் நீதிமன்றம் அணுகினால் 18 எம்எல்ஏக்களின் நீக்க உத்தரவு செல்லாது என அறிவிக்க வாய்ப்புகள் அதிகம். இதற்காக பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் கூட நீதிமன்றம் அனுகலாம்.

எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்திற்குப் பின் அவர்கள் தொகுதிகள் காலியானதாக தமிழக அரசின் அறிவிக்கை இயற்றப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இதை, வழக்கமாக ஒரு வாரத்திற்குள் இயற்றப்படும். ஆனால், அரசு அவர்கள் கைகளில் உள்ளது என்பதற்காக அதை உடனடியாக இயற்றியுள்ளனர். இதை கூட உயர் நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளது.

தமிழக அரசின் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில், தமிழக அரசியல் நிகழ்வுகளை தேர்தல் ஆணையம் கண்காணித்திருக்கும். இதனால், தனக்கு அனுப்பப்பட்டிருக்கும் அரசு ஆணை முறையாக இயற்றப்பட்டுள்ளதா என பரிசீலிக்கும். இதில், சபாநாயகர் உத்தரவிற்கு பல பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது'' எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 2002-ல் நடைபெற்ற சைதாப்பேட்டை, ஆண்டிப்பட்டி மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிரடியாக பணியாற்றிவர் கே.ஜே.ராவ். இவர், தனது ஓய்விற்குப் பிறகும் 4 வருடங்கள் தேர்தல் ஆணையத்தில் ஆலோசகராக 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர். அப்போது, அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்களின் பார்வையாளராக சென்றிருந்தார்.

தற்போது இவர் உச்ச நீதிமன்றம் டெல்லியின் கட்டிடங்கள் விதிமீறலின் மீது அமைத்த கண்காணிப்பு குழுவின் உறுப்பினராக உள்ளார். ஜே.எம்.லிங்டோ, என்.கோபால்சாமி, டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய முன்னாள் தேர்தல் அதிகாரிகளுடன் நானும் இணந்து 'மேம்பட்ட தேர்தல் நிர்வாக அமைப்பு' என ஒன்றை துவங்கி சமூகப் பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x