Published : 15 Sep 2017 01:57 PM
Last Updated : 15 Sep 2017 01:57 PM
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ தன்னிடம் விசாரிக்க வேண்டுமே தவிர தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை துன்புறுத்தக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
வியாழக்கிழமையன்று கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகி ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள சிபிஐ அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர் அனைவரையும் விடுவித்து விசாரணையையே முடிக்குமாறு உத்தரவிட்டிருந்ததையடுத்து கார்த்தி சிதம்பரம் ஆஜராக மறுத்து விட்டார். ஆனால் இது உண்மையல்ல விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்று சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரம் கூற்றை மறுத்தனர்.
“சிபிஐ என்னையே விசாரிக்க வேண்டுமே தவிர என் மகனை இதில் துன்புறுத்துவது கூடாது. சிபிஐ இது தொடர்பாக தவறான தகவலைப் பரப்பி வருவது வருத்தத்திற்குரியதாகும். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்பந்தப்பட்ட அனுமதியை வழங்கியது செல்லுபடியாகக் கூடியதே என்று எஃப்.ஐ.பி.பி அதிகாரிகள் எழுத்துப்பூர்வ பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்” என்று தொடர் ட்வீட்களில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த புகார்ப்பத்திரத்தில் மேக்சிஸ் கிளை நிறுவனமான மரீஷியஸைச் சேர்ந்த குளோபல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் 800 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய அனுமதி கேட்டிருந்தது இது அப்போதைய மதிப்பின்படி ரூ.5,127 கோடியாகும் என்று கூறியிருந்தது.
இதற்கான அனுமதியை வழங்க பொருளாதார விவகாரக் கமிட்டிக்கே உரிய அதிகாரம் உண்டு.
“ஆனால், அப்போதைய நிதியமைச்சர் இந்த முதலீட்டுக்கு அனுமதி அளித்தார். அன்னிய முதலீடு மேம்பாட்டு குழு அனுமதி அளித்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்றன. இதுதொடர்பான விவகாரங்களும் விசாரணையில் உள்ளன” என்று சிபிஐ 2014-ல் தெரிவித்திருந்தது.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு அதிகாரம் உள்ள ஒரு விஷயத்தில் நிதியமைச்சர் எப்படி அனுமதி அளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். ரூ.600கோடிக்கும் அதிகமான அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் அதிகாரம் பொருளாதார விவகார அமைச்சரவைக் குழுவுக்கே உள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT