Published : 07 Sep 2017 10:19 AM
Last Updated : 07 Sep 2017 10:19 AM
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஜவார்கி அருகே சன்னூர் குக்கிராமம் உள்ளது. சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த ஊரில் 30 தலித் குடும்பங்களும் வாழ்கின்றன. இந்த கிராமத்தில் ஊராட்சி குடிநீர் குழாய்கள் அமைக்கப்படாததால், அங்குள்ள 8 கிணறுகளில் இருந்தே மக்கள் குடிநீர் எடுக்க வேண்டியுள்ளது. இவற்றில் 7 கிணறுகள் சாதி இந்துக்களுக்கு சொந்தமாக உள்ளது. ஒரு கிணறு மட்டும் தலித் வகுப்பை சேர்ந்த மஞ்சப்பா (60) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது. இந்த நிலத்தையும் ஆதிக்க சாதியை சேர்ந்த கொள்ளாலப்ப கவுடா (52) என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.
இந்நிலையில் சாதி இந்துக்களுக்கு சொந்தமான கிணறுகளில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தலித் மக்கள் மஞ்சப்பாவின் கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்தனர். இதற்கு நிலத்தை குத்தகை எடுத்துள்ள கொள்ளாலப்ப கவுடா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தக் கிணற்றில் கடந்த 30-ம் தேதி துர்நாற்றம் வீசியது. இது தொடர்பாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் கிணற்று நீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிணற்று நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், கொள்ளாலப்ப கவுடா உள்ளிட்ட 3 பேர் மீது வன்கொடுமை உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து, குல்பர்கா மத்திய சிறையிலும் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT