Last Updated : 06 Sep, 2017 05:53 PM

 

Published : 06 Sep 2017 05:53 PM
Last Updated : 06 Sep 2017 05:53 PM

எதற்கும் அஞ்சாத என் தோழியை காவி பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துவிட்டேன்: கவுரி லங்கேஷின் நண்பர் வேதனை

 

எதற்கும் அஞ்சாத என் தோழியை காவி பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் கவுரியின் நண்பரும் அவர் மீது தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை கையாண்டவருமான வழக்கறிஞர் பி.டி.வெங்கடேஷ்.

இந்நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்கு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் அவரது நண்பர் வழக்கறிஞர் பி.டி.வெங்கடேஷ்.

அவர் கூறியதாவது:

என் தோழி கவுரி லங்கேஷ் துணிச்சலானவர். அநீதிகளைத் தட்டிக் கேட்பவர். அடக்குமுறைகள் எங்கெல்லாம் நிகழ்கிறதோ அங்கெல்லாம் அவர் எதிர்ப்புக் குரலுடன் ஆஜராகிவிடுவார். மதவாதிகளையும், வகுப்புவாதிகளையும் தன் எழுத்துகளால் பதம் பார்த்துவிடுவார். அதனாலேயே அன்றாடம் அவருக்கு செல்போனிலும் இமெயிலிலும் அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கும். அவர் மீதான 40-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளில் நான் அவருக்காக வாதாடியிருக்கிறேன். ஆனால், ஒருமுறைகூட தனக்கு வரும் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்ததில்லை. இத்தகைய நபர்களுக்காக என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை என்றே கூறுவார். அவருக்கு நேர்ந்த அவலம் ஜனநாயகப் படுகொலை. கடந்த வாரம்தான் கடைசியாக அவரை சந்தித்தேன். அதற்குள்இப்படி நேரும் என நான் நினைக்கவில்லை.

இந்த படுகொலை இதற்குமுன் கொல்லப்பட்ட கல்புர்கி, தபோல்கர் படுகொலைகள் பாணியிலேயே நிகழ்ந்துள்ளது. கொலை யுத்தியை வைத்தே கவுரியை காவி பயங்கரவாதிகளே கொன்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திவிடலாம். கருத்துச் சுதந்திரத்தை நெறித்துள்ள இந்த கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். எதற்கும் அஞ்சாத என் தோழியை காவி பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துவிட்டேன். இந்த கொலைக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

முற்போக்கு சிந்தனையாளர்களை குரலை நெறிக்கும் இத்தகைய வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது மத்திய அரசின் கடமையாகும். ஒரு சிறந்த பத்திரிகையாளரை, ஒரு சமூக செயற்பாட்டாளரை இழந்துவிட்டோம். இனியும் இது நடக்கக் கூடாது.

இவ்வாறு வெங்கடேஷ் நம்மிடம் கூறினார்.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்லேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'லங்கேஷ் பத்ரிகே' என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கவுரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் இந்துத்துவ அமைப்புகள் கவுரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளை தொடர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x