Published : 28 Aug 2017 10:00 AM
Last Updated : 28 Aug 2017 10:00 AM

சிக்கிமின் டோக்லாம் போன்ற சம்பவம் எதிர்காலத்தில் அதிகரிக்க கூடும்: ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

‘‘சிக்கிமின் டோக்லாம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள சம்பவம் போல் எதிர்காலத்தில் அதிகரிக்க கூடும். மக்களும் ராணுவமும் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.

சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் இந்தியா, பூடான், சீனா எல்லைகள் வருகின்றன. அங்கு தற்போதுள்ள நிலையை மாற்றி சாலை அமைக்க சீனா முயற்சித்தது. அதை இந்தியப் படைகள் தடுத்துவிட்டன.

இதனால் டோக்லாம் பகுதியில் சீனா ராணுவத்தை குவித்தது. பதிலுக்கு இந்தியாவும் படைகளை குவித்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக போர்ப் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், புனே பல் கலைக்கழத்தின் பாதுகாப்பு மற்றும் போர் வியூகங்கள் துறை சார்பில் நேற்று கருத்தரங்கு நடந்தது. இதில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

டோக்லாம் பகுதியில் தற்போதுள்ள நிலையை மாற்ற சீனா முயற்சி செய்து வருகிறது. அதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், டோக்லாம் போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம். உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சிக்கலாம். அப்போது எல்லையில் உள்ள இருதரப்பு படைகளுக்கு இடையில் சச்சரவு ஏற்படலாம். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்க ஒருங்கிணைந்த செயல் திட்டத்துடன் நாம் தயாராகவே இருக்கிறோம்.

சிக்கிம் மாநிலம் டோக்லாம் எல்லையில் பிரச்சினை பெரிதாவதற்கு முன்பு, இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகளின் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஜூன் 16-ம் தேதிக்குள் இரு நாட்டு படைகளை தங்கள் முகாமுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினோம். ஆனால், இந்தப் பிரச்சினையில் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. இப்போது தூதரகம் மற்றும் அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டிய நிலை வந்துவிட்டது.

இவ்வாறு ராணுவ தளபதி பிபின் ராவத் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x