Published : 24 Aug 2017 09:54 AM
Last Updated : 24 Aug 2017 09:54 AM

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ: குழந்தை படிக்காததால் தாய் அடித்தார் - நியாயப்படுத்தும் உறவினரும் பாடகருமான டோஷி சாப்ரி

படிக்காமல் அடம் பிடித்ததால்தான் எனது உறவினர் தனது குழந்தையை அடித்தார் என பாடகர் டோஷி சாப்ரி நியாயப்படுத்தி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் ஒரு வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் 3 வயது பெண் குழந்தையை தாய் படிக்க வைக்கிறார். அப்போது அந்தக் குழந்தை தவறாக சொன்னதற்காக கண்டிக்கிறார். அதனால் அந்தக் குழந்தை அழுதபடி படிக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த தாய் குழந்தையின் கன்னத்தில் அறைகிறார். பிறகு அந்தக் குழந்தையும் ஆத்திரமடைகிறது.

இந்த வீடியோ காட்சியை கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, யுவராஜ் சிங் மற்றும் ஷிகர் தவன் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் முதலில் பகிர்ந்துள்ளனர். அத்துடன் குழந்தையின் தாயைக் கண்டித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

அதன் பிறகு வேகமாக வலம் வந்த இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், சின்னக் குழந்தையை இப்படியா கண்டிப்பது என்று வசைபாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்தக் குழந்தை, பாடகரும் இசையமைப்பாளருமான டோஷி சாப்ரியின் உறவினர் குழந்தை என தெரியவந்துள்ளது. அவர் அந்தக் குழந்தையை அடித்ததை குறைகூறமுடியாது என நியாயப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து டோஷி சாப்ரி கூறும்போது, “இந்த வீடியோ காட்சியில் வருவது எனது உறவினரின் குழந்தை. அந்தக் குழந்தை அடம்பிடிப்பதை தனது சகோதரர் மற்றும் கணவரிடம் காட்டுவதற்காக படம் பிடித்துள்ளார். பொதுமக்களின் பார்வைக்காக இந்த வீடியோவை எடுக்கவில்லை. ஆனால், இது இவ்வளவு பிரச்சினை ஆகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எங்களைப் பற்றி விராட் கோலிக்கோ ஷிகர் தவனுக்கோ தெரியாது. எங்கள் குழந்தையைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். விளையாடச்செல்வதற்கு கூட அவள் அடம் பிடிப்பாள். அவளது சுபாவம் அப்படி. அடுத்த நிமிடமே சகஜமாக விளையாடச் சென்று விடுவாள். கண்டிக்காவிட்டால் சரியாக படிக்க மாட்டாள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x