Last Updated : 12 Aug, 2017 08:06 PM

 

Published : 12 Aug 2017 08:06 PM
Last Updated : 12 Aug 2017 08:06 PM

கோரக்பூர் துயரம்: யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்; காங்கிரஸ், சமாஜ்வாதி தாக்கு

கோரக்பூர் மருத்துவமனையில் 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் பலியான துயரச்சம்பவத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கூறும்போது, “குழந்தைகளைப் பறிகொடுத்த குடும்பத்தினருக்காக என் இதயம் வாடுகிறது. அலட்சியத்தினால்தான் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

மருத்துவமனை நிர்வாகம், ஆக்சிஜன் சப்ளையர், மாவட்ட நிர்வாகம் ஆகியவை மீது மனிதக் கொலை வழக்கு தொடர வேண்டும். முதல்வர் யோகி தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும், சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத், மருத்துவக் கல்வி அமைச்சர் அஷுடோஷ் டேண்டன் ஆகியோரும் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

சமாஜ்வாதி தலைவர் ராம் கோபால் யாதவ் கூறும்போது, இது முதல்வர் யோகியின் தொகுதியில் நடந்துள்ளது. கோரக்பூர் அதிகாரிகள் யாரைக்கண்டும் பயப்படுவதில்லை என்றே தெரிகிறது, மத்திய அரசு கொடுக்கும் இடத்தினால்தான் இது நடைபெறுகிறது.

கோரக்பூர் யோகியின் தொகுதி, இவர் இங்கு நிறைய முறை முகாமிட்டுள்ளார். ஆனாலும் இது குறித்து அலட்சியம் காட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதோடு, விசாரணை தீவிரமாக நடைபெற உத்தரவிடுவது அவசியம், என்றார்.

மருத்துவமனைக்கு ஆக்சிசன் சப்ளை செய்யும் புஷ்பா சேல்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 3 மற்றும் 10ம் தேதிகளில் கொடுக்கப் படவேண்டிய நிலுவைத் தொகையினால் சிலிண்டர்கள் சப்ளையை நிறுத்திக் கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.

கையிலிருப்பில் இருந்த சிலிண்டர்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி வரையே வரும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராணவாயு இல்லாததால் மூளையில் அழற்சி ஏற்பட்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x