Published : 12 Aug 2017 10:23 AM
Last Updated : 12 Aug 2017 10:23 AM

மக்களவையில் 14 மசோதா நிறைவேற்றம்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் கால வரையின்றி ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. மக்களவையில் 19 அமர்வுகள் நடந்தன. இவற்றில் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா உட்பட 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத் தொடரின் போது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடக்கும் படுகொலைகள், வன்முறை தாக்குதல், குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் மீது பாஜக.வினர் தாக்குதல் நடத்தியது குறித்து எதிர்க்கட்சியின் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆவணங்களை கிழித்தெறிந்த காங்கிரஸ் கட்சியின் 6 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய 75-ம் ஆண்டு நினைவை முன்னிட்டு, சிறப்பு விவாதமும் மக்களவையில் நடந்தது. இதுகுறித்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறும்போது, ‘‘மக்களவை 71 மணி நேரம் பணியாற்றி உள்ளது. இதில் உறுப்பினர்களின் இடையூறுகள் காரணமாக 29.58 மணிநேரம் வீணானது. எனினும் அதை ஈடுகட்ட கூடுதலாக 10.36 மணி நேரம் பணியாற்ற முயற்சிக்கப்பட்டது’’ என்றார்.

இந்தக் கூட்டத் தொடரில் நிறுவனங்கள் திருத்த மசோதா, நபார்ட் திருத்த மசோதா உட்பட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவை

மக்களவையைப் போலவே மாநிலங்களவையிலும் பசு குண்டர்களின் தாக்குதல் உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து காரசாரமாக விவாதம் நடந்தது. இந்தக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற்றன. 80 மணி நேரம் மாநிலங்களவை நடைபெற்றாலும், உறுப்பினர்களின் இடையூறுகள் காரணமாக 25 மணி நேரம் வீணானது.

கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று மாநிலங்களவை தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னர் கடந்த ஜூலை 17-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்ற அலுவல்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார். இதையடுத்து மக்களவை, மாநிலங்களவை இரண்டும் தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்தி வைக்கப்பட்டன.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x