Published : 12 Aug 2017 09:04 AM
Last Updated : 12 Aug 2017 09:04 AM
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணை தாமதமாகி வருகிறது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பு கடந்த மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதை பரிசீலணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் மே 10-ம் தேதி வழக்கு எண் ஒதுக்கியது. சீராய்வு மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே, மூல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பினாகி சந்திரகோஷ் கடந்த மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
மற்றொரு நீதிபதியான அமிதவராய் தலைமையிலான அமர்வு சீராய்வு மனுவை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இம்மனு விசாரணைக்கு வராமல் உள்ளது.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி நீதிபதிகள் அமிதவ ராய், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பு காரணமாக இவ்வழக்கில் இருந்து நீதிபதி ரோஹின்டன் விலகியதால், விசாரணை தள்ளிப்போனது.
இந்நிலையில் நேற்று சசிகலா தரப்பின் சீராய்வு மனுவை நீதிபதி நவின் சின்ஹா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றும் சீராய்வு இம்மனு விசாரிக்கப்படவில்லை. பொதுவாக குற்றவியல் வழக்குகளில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும். ஆனால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டு, 90 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை விசாரிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT