Published : 11 Aug 2017 10:10 AM
Last Updated : 11 Aug 2017 10:10 AM
தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரும் சீராய்வு மனுவை மூவரும் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தனர். அதில், “அரசு ஊழியரான ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அரசு ஊழியர் அல்லாத எங்களை ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் தண்டிக்க முடியாது. எனவே, எங்களையும் விடுவிக்க வேண்டும்” என முறையிட்டனர்.
கோடை விடுமுறை காரணமாக இந்த சீராய்வு மனு மீதான விசாரணை தள்ளிப் போனது. இந்நிலையில், நீதிபதிகள் அமிதவ ராய், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
“நீதிபதி ரோஹின்டன் நரிமனின் தந்தையும், வழக்கறிஞருமான ஃபாலி நரிமன் இவ்வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகி வாதிட்டுள்ளார். தந்தை வாதிட்ட வழக்கில் மகன் தீர்ப்பளிக்கக் கூடாது” என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இவ்வழக்கில் இருந்து நீதிபதி ரோஹின்டன் நரிமன் விலகியதால், விசாரணை தள்ளிப்போனது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம், சசிகலா தரப்பின் சீராய்வு மனு நீதிபதி நவின் சின்ஹா தலைமையிலான அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. பொதுவாக குற்றவியல் வழக்குகளில் சீராய்வு மனு தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் விசாரிக்கப்பட வேண்டும். இவ்வழக்கில் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டுள்ளதால், இன்று விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT