Published : 11 Aug 2017 09:59 AM
Last Updated : 11 Aug 2017 09:59 AM

‘நீட்’ தேர்வில் வெவ்வேறு மொழிகளில் ஒரே தரத்தில் கேள்வி கேட்கப்பட்டதா?- சிபிஎஸ்இ விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வில் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் ஒரே தரத்திலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தனவா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்வை நடத்திய சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்பட்ட தேசிய தகுதி நுழைவுத்தேர்வில் (நீட்) பல்வேறு மொழிகளில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் ஒரே தரத்தில் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அமீத்வா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மந்தீர் சிங், ‘நீட்’ தேர்வில் பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளின் மொழிபெயர்ப்பு அல்ல. இரண்டும் வெவ்வேறானவை. ஆனால், அவற்றின் கடினத்தன்மை (தரம்) ஒரே விதமானது என்று வாதிட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங், பிராந்திய மொழிகளில் இடம்பெற்ற கேள்விகளும், ஆங்கிலம், இந்தியில் இடம்பெற்ற வினாக்களும் ஒன்றுபோல் இல்லை என்று வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘நீட்’ தேர்வில் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் ஒரே தரத்திலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தனவா என்பதற்கு விளக்கும் அளிக்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x