Last Updated : 05 Aug, 2017 08:35 AM

 

Published : 05 Aug 2017 08:35 AM
Last Updated : 05 Aug 2017 08:35 AM

ஹமீது அன்சாரி பதவி 10-ம் தேதி முடிகிறது: இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - மாலையில் முடிவு வெளியாகும்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. எம்.பி.க்கள் மட்டும் இத்தேர்தலில் வாக்களிக்கின்றனர். இதன் முடிவு இன்று மாலையே வெளியிடப்பட உள்ளது. பாஜக வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு அதிகம் உள்ளதால் அவரே அடுத்த குடியரசுத் துணைத் தலைவராகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரி கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி அந்தப் பதவிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டார். அதன்பின் 2-வது முறையாக கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது.

இதையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த எம்எல்ஏக் களும் வாக்களித்தனர். ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் வாக்களிக்க உள்ளனர்.

ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும் (68), எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் (72) தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்க ளவையை சேர்த்து மொத்தம் 787 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மக்களவையில் 543 எம்.பி.க்கள் உள்ளனர். 2 இடங்கள் காலியாக உள்ளன. மாநிலங்களவையில் 244 எம்.பி.க்கள் உள்ளனர். இங்கு ஒரு இடம் காலியாக உள்ளது.

இந்தத் தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘மக்கள வையில் பாஜக.வுக்கு 338 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 81 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. தவிர இரு அவைகளிலும் அதிமுகவுக்கு 50, ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு 10, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு 14 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜக வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவளிக் கின்றனர்’’ என்றனர்.

500 எம்.பி.க்கள் ஆதரவு

எனவே, வெங்கய்ய நாயுடுவுக்கு 493 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாக தெரிகிறது. மொத்தம் 787 எம்.பி.க் களில் 394 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தாலே குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறலாம். அந்த எண்ணிக்கையை விட நாயுடுவுக்கு அதிகம் உள் ளது. இதற்கிடையில், தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் வாக்குகள் கிடைக்கும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியின் பேரனும் மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபால்கிருஷ்ண காந்திக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டுக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தவிர குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளித்த பிஜு ஜனதா தளம் கட்சி, இப்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால்கிருஷ்ண காந்திக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவிட்டது. பிஹாரில் மெகா கூட்டணியில் இருந்து விலகி பாஜக.வில் சேர்ந்தாலும் எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால் கிருஷ்ண காந்திக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐக்கிய ஜனதா தளமும் அறிவித்துள்ளது.

எம்.பி.க்களுக்கு சிறப்பு பேனா

எனினும், போதுமான எம்.பி.க் களின் ஆதரவு பாஜக.வுக்கு உள்ளதால் வெங்கய்ய நாயுடு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. எம்.பி.க்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் எம்.பி.க்கள் வாக்களிக்க சிறப்பு பேனா வழங்கப்பட உள்ளது.

மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு முடிந்த பிறகு உடனடியாக எண்ணிக்கை தொடங்கி விடும். எனவே, இன்று மாலையே முடிவுகள் வெளியிடப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் துணைத் தலைவராக கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை பைரோன் சிங் ஷெகாவத் பதவி வகித்தார். ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள ஒருவர் குடியரசுத் துணைத் தலைவரானது அதுவே முதல் முறை. அவருக்கு அடுத்து ஆர்எஸ்எஸ் தொடர்புடைய வெங்கய்ய நாயுடு புதிய குடியரசுத் துணைத் தலைவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x