Last Updated : 10 Nov, 2016 10:00 AM

 

Published : 10 Nov 2016 10:00 AM
Last Updated : 10 Nov 2016 10:00 AM

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: அரசு முடிவுக்கு அர்த்த கிராந்தி காரணமா?

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு புனேவைச் சேர்ந்த ‘அர்த்த கிராந்தி (அர்த்தமுள்ள புரட்சி)’ என்ற அமைப்பு காரணமாக இருந்ததாக கருதப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 11 ஆண்டுகளாக இந்த அமைப்பு தீவிரப் பிரச்சாரம் செய்துவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன், ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள், நிதி ஆலோசகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைந்து ‘அர்த்த கிராந்தி’ அமைப்பைத் தொடங்கினர். நாட்டில் வரி மற்றும் நிதிச் சீர்திருத்தம் குறித்து 5 புரட்சிகரமான யோசனைகள் இவர்கள் கூறியுள்ளனர். இதில் முக்கியமான தாக, 100, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று இவர்கள் கூறினர். இவர்களின் இந்த யோசனை முழுமையாக ஏற்கப்படா விட்டாலும் பகுதி அளவில் ஏற்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதற்காக, நாடு முழுவதிலும் உள்ள அர்த்த கிராந்தி உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த அமைப்பு சார்பில் கூட்டங்கள் நடத்தி, நாட்டின் அனைத்து கட்சிகள், அரசு மற்றும் தனியார் நிதி அமைப்புகளுக்கு யோசனைகள் எடுத்துரைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவரைச் சந்தித்தும் இவர்கள் விளக்கியுள்ளனர். அப்போது மோடியை சந்திக்க இவர்களுக்கு 7 நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டது. என்றாலும் இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீட்டித்ததாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்குச் பிறகும் இந்த அமைப்பினர் எம்.பி.க்களை சந்தித்து தங்கள் யோசனைகளை விளக்கி வந்தனர்.

அர்த்த கிராந்தி அமைப்பின் சீர்திருத்த யோசனைகளால் கவரப்பட்ட பாஜக நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருந்து அதன் கூட்டங்களை நடத்தியுள்ளனர். இவர்கள் யோசனைகளால் ஈர்க்கப்பட்ட யோகா குரு ராம்தேவ், கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி ஆகியோரைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கியுள்ளார். இவர்கள் யோசனைகளை கேட்டு ஆதரவு தெரிவித்த பலரது கருத்துகள் அர்த்த கிராந்தி இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மோடி, நிதின் கட்கரி உள்ளிட்ட பலரது கருத்துகள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடிக்கு முன்பாக நிதியமைச்சர் ஜேட்லி, அர்த்த கிராந்தியின் யோசனைகள் குறித்து ஆலோசித்து வருவதாக பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x