Last Updated : 23 Jun, 2017 09:49 AM

 

Published : 23 Jun 2017 09:49 AM
Last Updated : 23 Jun 2017 09:49 AM

3 லஷ்கர் தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இவர்களில் ஒருவர் பல்வேறு கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி ஆவார்.

புல்வாமா மாவட்டத்தின் காக்கபோரா பகுதியில், லஷ்கர் தீவிரவாத அமைப்பில் இணைந்த உள்ளூர் இளைஞர்கள் 3 பேர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து ஏற்பட்ட மோதலில் நேற்று அதிகாலையில் 3 தீவிரவாதிகளும் கொல்லப் பட்டனர். இதில் ஒருவர் மதிஜ் தார் என அடையாளம் காணப்பட் டுள்ளார். காக்கபோரா ஊராட்சி மன்றத் தலைவர் கொலை, புல்வாமா மாவட்ட ஊராட்சி தலைவர் கொலை உட்பட பல் வேறு கொலைச் சம்பவங்களில் இவர் தொடர்புடையவர் ஆவார்.

உள்ளூர் தீவிரவாதிகளும் அவரது ஆதரவாளர்களும் அதிகம் இருப்பதாக நம்பப்படும் காக்கபோரா பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான முதல் வெற்றிகரமான நடவடிக்கை இதுவாகும்.

அனந்தநாக் மாவட்டம், அர்வின் என்ற கிராமத்தில் லஷ்கர் கமாண்டர் ஜுனைத் மட்டூ கடந்த 17-ம் தேதி கொல்லப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் மேலும் 3 தீவிரவாதிகள் தற்போது கொல்லப்பட்டது அந்த அமைப்புக்கு தரப்பட்ட பலமான அடியாக கருதப்படுகிறது.

3 நாட்களில் தீவிரவாதி களுக்கு எதிரான 2-வது வெற்றி கரமான நடவடிக்கை இதுவாகும். வடக்கு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டம், சோப்போரில் நேற்று முன்தினம் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் இருவர் இறந்தனர். பதில் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல் லப்பட்டார். குப்வாரா மாவட்டம் கேரன் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x