Published : 29 Jan 2015 10:04 AM
Last Updated : 29 Jan 2015 10:04 AM

100 மாடியில் தலைமை செயலகம்: தெலங்கானா அரசு திட்டம்

தெலங்கானா அரசு புதிய தலைமை செயலகத்துக்காக 100 அடுக்கு மாடி கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு நாட்டின் 29-வது மாநிலமாக உதயமானது தெலங்கானா. இந்த மாநிலத்தின் புதிய தலைமை செயலகம் 100 அடுக்கு மாடியுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை முதல்வர் கே. சந்திர சேகர ராவ் நேரில் சென்று ஆய்வு நடத்தி உள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள எர்ரகட்டா பகுதியில் தற்போது காச நோயாளிகளுக்கென தனி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில்தான் புதிய தலைமை செயலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வளாகத்தில் அமைச்சர்களின் குடியிருப்புகள், அதிநவீன வசதிகளுடன் கூடிய அமைச்சரவை அலுவலகங்கள், சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவை நடத்துவதற்கான மிகப்பெரிய மைதானம் ஆகியவற்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

நகரின் மையப்பகுதியில் இருப்பதால்தான் காச நோய் மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெலங்கானா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x