Last Updated : 11 Aug, 2014 08:11 AM

 

Published : 11 Aug 2014 08:11 AM
Last Updated : 11 Aug 2014 08:11 AM

வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்பு பணம்: மத்திய அரசு 24,085 தகவல்கள் சேகரிப்பு

இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் தொடர்பாக நியூசிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளி லிருந்து 24,085 தகவல்கள் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளன.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கோடிக்கணக் கான பணத்தை மீட்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் மற்றும் மத்திய வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி, வருவாய் புலனாய்வு, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் உயர் அதிகாரிகள் அடங்கிய 13 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

இக்குழு வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியர்களின் கருப்பு பணம் தொடர்பாக, வெளி நாடுகளிலிருந்து 24,085 தகவல்கள் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

பல்வேறு நாடுகளுடன் வரி ஏய்ப்பு தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா ஏற்கெனவே கையெழுத்திட்டுள்ளது. அந்த நாடு களிலிருந்துதான் இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நியூசிலாந்திலிருந்து 10,372 வங்கி கணக்கு, வரி ஏய்ப்பு உள்ளிட்ட தகவல்கள் வந்துள்ளன.

மேலும் ஸ்பெயின் (4,169), பிரிட்டன் (3,164), ஸ்வீடன் (2,404), டென்மார்க் (2,145), பின்லாந்து (685), போர்ச்சுகல் (625), ஜப்பான் (440), ஸ்லோவேனியா (44) ஆகியவை தகவல்களை அனுப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, இத்தாலி, டிரினிடாட் அண்டு டொபாகோ ஆகிய நாடுகளும் குறைந்த எண்ணிக்கையில் தகவல்களை அனுப்பி உள்ளன.

இந்தத் தகவல்கள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கள்ள பணப்புழக்கம்

இதற்கிடையே, வர்த்தக ரீதியிலான கள்ளப் பணப் புழக்கம் அதிகரித்து வருவதை வருவாய்த் துறை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும்போது, அதன் மதிப்பை உயர்த்தி அல்லது குறைத்து காட்டுதல், போலி ரசீதுகள் தயாரித்தல், பொருட்களை குறைத்து அனுப்பி தொகையை உயர்த்திக் காட்டுதல் போன்ற மோசடிகள் மூலம் ஹவாலா பணம் புழங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து சில பொருட்களை இறக்குமதி செய்வதற்காக, இங்கிருந்து வங்கி மூலம் வெளிநாட்டு கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. அந்தப் பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கான அவசியமே இல்லை. இதன்மூலம் வர்த்தக பரிவர்த்தனை என்ற போர்வையில் கள்ள பணப்புழக்கம் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

கடந்த 2012 13 நிதியாண்டில், 251 சம்பவங்கள் இதுபோல நடந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.1,130 கோடி மோசடி நடந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2013 14 நிதியாண்டில் 296 ஆகவும், ரூ.1,817 கோடி ஆகவும் உள்ளது. இந்த வர்த்தக கள்ள பணப் புழக்கம் சிறப்பு புலனாய்வுக் குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்தும் அக் குழு ஆய்வு செய்து நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x