Last Updated : 07 Dec, 2016 02:37 PM

 

Published : 07 Dec 2016 02:37 PM
Last Updated : 07 Dec 2016 02:37 PM

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தொலை உணர்வு ரிசோர்சாட்-2ஏ செயற்கைக் கோள்

பூமியில் உள்ள இயற்கை வளங்களை துல்லியமாக படம் பிடிக்க உதவும்



பிஎஸ்எல்வி சி-36 ராக்கெட் மூலம் ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள், பூமியில் உள்ள இயற்கை வளங்களை துல்லியமாக படம் பிடிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலு வலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஆந்திரா மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து புதன்கிழமை காலை 10.25 மணிக்கு ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-36 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள், குறிப்பிட்டபடி சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) திறமையில் இந்த வெற்றி, இன்னொரு இமாலய சாதனை ஆகும்.

ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்-டவுன் திங்கள்கிழமை இரவு 10.25 மணிக் குத் தொடங்கியது. இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தலைமையில் விஞ்ஞானிகள் ராக்கெட்டை விண்ணில் செலுத்த தேவையான அனைத்து நடவடிக் கைகளையும் செய்து முடித்தனர். இந்த முறை ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி முற்றிலும் தொலைவில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பும் நேரம் குறைக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது. இந்த முறை ராக்கெட்டில் 6 ஸ்டிராப்ஆன் மோட்டார் கள் பொருத்தப்பட்டு இருந்தன. இவை ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து கிளம்பு வதற்கு கூடுதல் உந்துசக்தியை அளிக்கும்.

சரியாக காலை 10.25 மணிக்கு பிஎஸ்எல்வி-சி-36 ராக்கெட், ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக்கோளை சுமந்தபடி விண்ணில் சீறிப்பாய்ந்தது. ராக்கெட் செலுத்தப்பட்ட 18-வது நிமிடத்தில் திட்டமிட்டபடி சூரிய துருவ சுற்றுவட்டப் பாதையில் 822 கிலோ மீட்டர் தொலைவில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த முறை ராக்கெட்டில் ஒரு கேமரா பொருத்தப்பட்டு செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் காட்சியையும் விஞ்ஞானிகள் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிடங் களில் செயற்கைக்கோளின் சூரிய மின்னுற்பத்தி தகடுகள் விரிக்கப்பட்டன. செயற்கைக்கோளில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டதும் பல்வேறு சோதனை கள் மற்றும் இயக்க நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக்கோள் 1,235 கிலோ எடை கொண்டது. செயற்கைக்கோளுடன் சேர்த்து பிஎஸ்எல்வி ராக்கெட்டின் மொத்த எடை 3 லட்சத்து 20 ஆயிரம் கிலோ ஆகும். செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டபோது விஞ்ஞானிகள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இஸ்ரோ தலைவர் கிரண் குமார் அனைத்து விஞ்ஞானிகளையும் பாராட்டினார். பிஎஸ்எல்வி ராக்கெட்களை வெற்றிகரமாக செலுத்துவதில் இஸ்ரோ முதிர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு வெற்றியும் மேலும் மேலும் பொறுப்பை வழங்குவதாக தெரிவித்தார். வரும் ஜனவரி 28-ம் தேதி மிகவும் கனமான ஒரு செயற்கைக்கோள் ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானி கே.சிவன் தெரிவித்தார்.

பிஎஸ்எல்வி ராக்கெட்டானது ஒரே நேரத்தில் பல்வேறு செயற்கைக்கோள் களை விண்ணில் செலுத்தும் ஆற்றல் கொண்டது. தற்போது 38-வது முறையாக விண்ணில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது. அதில் 37 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது என்பது இஸ்ரோவின் பெருமைக்கு சான்றாகும். கடந்த 1994 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட்கள் இதுவரை 121 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கின்றன. அவற்றில் 79 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள். எஞ்சிய 42 செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்குச் சொந்தமானவை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துல்லியமாக படம் பிடிக்கும்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக்கோள் பூமியில் இருந்து 822 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைக்கோள், பூமியில் உள்ள இயற்கை வளங்களை துல்லியமாக படம் பிடிக்க உதவும்.

ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இஸ்ரோ சார்பில் நேற்று விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-36 ராக்கெட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x