Published : 31 Oct 2015 03:26 PM
Last Updated : 31 Oct 2015 03:26 PM
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக, விகல்ப் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் உறுதி ஆகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் ஓடும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும்.
இந்த மாற்று ரயில் திட்டத்தை நவம்பர் 1-ஆம் தேதி முதல் டெல்லி - லக்னோ மற்றும் டெல்லி - ஜம்மு வழித்தட்டத்தில் ஓடும் ரயில்கள் முன்பதிவில் சோதனை செய்யவுள்ளனர்.
தற்போதைக்கு விகல்ப் திட்டத்தை, இணையம் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் இரண்டு ரயில்களுக்கும், இரண்டு வழித்தடங்களில் மட்டுமே செல்லுபடியாகும் என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இணையம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது, விகல்ப் என்ற தேர்வையும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதே பாதையில் ஓடும் அடுத்த ரயிலில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும். இதன்மூலம் காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பும், பதிவு செய்யாமல் காலியாக இருக்கும் டிக்கெட்டுகளும் நிரப்பப்பட்டு இரண்டு விதங்களில் ரயில்வே துறையின் நோக்கம் நிறைவேறுகிறது.
விகல்ப் தேர்வை தேர்ந்தெடுத்தவர்களுக்கு, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் குறித்த எஸ்.எம்.எஸ் செய்தியும் வரும். மேலும் இதற்கு கூடுதல் கட்டணம் இல்லை. கட்டணங்களில் மாறுதல் இருந்தால் அதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. மாற்று ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணியின் பெயர், முதல் ரயிலின் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறாது. மாற்று ரயிலில் பயணம் செய்பவர்கள் என்ற புதிய பட்டியல் தயார் செய்யப்படும்.
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு எப்போதுமே அதிக மவுசு இருக்கும் நிலையில், குறிப்பாக பண்டிகை சமயங்களில் தேவை அதிகரித்து வருவதால் இந்த திட்டம் பயந்தரக்கூடும் என்ற் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சோதனையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மற்ற வழித்தடங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT