Last Updated : 12 Mar, 2015 09:10 PM

 

Published : 12 Mar 2015 09:10 PM
Last Updated : 12 Mar 2015 09:10 PM

மொரீஷியஸுக்கு இந்திய போர்க்கப்பலை அர்ப்பணித்த மோடி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரகுடா போர்க்கப்பல் மொரீஷியஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டின் கடல் பாதுகாப்பு சேவைக்கு அர்ப்பணித்து வைத்தார்.

செசல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி கடந்த 10-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை ஐந்து நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல்கட்டமாக செசல்ஸ் நாட்டுக்கு அவர் சென்றார். அப்போது அந்த நாட்டின் கடல் பாதுகாப்பை அதிகரிக்க அதிநவீன ரேடார் கருவிகள் வழங்கப்பட்டன.

அங்கிருந்து மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸுக்கு சென்றார். அந்த நாட்டு அதிபர் கைலாஷ் புர்யாக், பிரதமர் அனிரூத் ஜுக்நாத் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இரண்டாவது நாளில் அவர் மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிஜிஎஸ். பாரகுடா போர்க்கப்பல் கடந்த மாதம் மொரீஷியஸ் நாட்டுக்கு வழங்கப்பட்டது. அந்தக் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டின் கடல் பாதுகாப்பு சேவைக்கு அர்ப்பணித்து வைத்தார்.

இந்த விழாவில் அவர் பேசியபோது, பாரகுடா போர்க்கப்பல் மொரீஷியஸ் நாட்டுக்காகவே மிகவும் நேர்த்தியாக வடிமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் நாட்டின் கடல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.

மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் ஜுக்நாத் பேசியபோது, இந்திய பெருங்கடலின் முக்கிய பகுதியில் நாடு அமைந்துள்ளது. புதிய போர்க்கப்பல் நாட்டின் கடல்பரப்பு கண்காணிப்பு பணிக்கும் கடல் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைக்கும் பயன்படுத்தப்படும்.

மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அதிவேக போர் விமானம் உள்ளிட்டவை தேவைப்படுகிறது. அதற்கு இந்திய அரசு உதவும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் கொல்கத்தா கப்பல் கட்டுமான தளத்தில் வடிவமைக்கப்பட்ட பாரகுடா போர்க்கப்பல் 1300 டன் எடை கொண்டது. இதில் அதிநவீன போர்க்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x