Published : 26 Mar 2014 11:45 AM
Last Updated : 26 Mar 2014 11:45 AM

முசாபர்நகர் கலவரம்: உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

உத்திரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் கலவரம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், முசாபர்நகர் கலவரத்தை கட்டுபடுத்த மாநில அரசு தவறிவிட்டது. கலவரத்தில் தொடர்புடையவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய மாநில அரசுகளின் உளவுப்பிரிவுகள் கலவரத்திற்கான காரணியை கண்டுபிடித்திருந்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தது.

மேலும், மக்களின் அடிப்படை உரிமைகள் அத்துமீறப்பட்ட போது அதனை தடுக்க மாநில அரசு தவறிவிட்டது என கூறியுள்ளது.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என்ற மாநில அரசின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டிய அமர்வு, மத அடிப்படையில் நிவராணத்தை அரசு கட்டுபடுத்தக்கூடாது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்றது.

பாஜக கோரிக்கை:

உ.பி. மாநில அரசின் கவனக்குறைவு காரணமாகவே முசாபர் நகரில் கலவரம் நடைபெற்றதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதற்கு தார்மீக பொறுப்பேற்று மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவி விலக வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x