Published : 06 Feb 2015 09:12 PM
Last Updated : 06 Feb 2015 09:12 PM

மராத்திய நாவலாசிரியர் பாலச்சந்திர நெமதேவுக்கு 2014க்கான ஞானபீட விருது

நாட்டின் உயரிய விருதான ஞானபீட விருது, மராத்தியின் தலைசிறந்த நாவலாசிரியர் பாலச்சந்திர நெமதேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 76. மராத்தியில் இவ்விருதைப் பெறும் நான்காவது எழுத்தாளர் இவர்.

2014ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது இவருக்கு வழங்கப்படுவதாக பாரதிய ஞானபீட விருதுத் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ஞானபீட விருதைப் பெறும் பாலச்சந்திர நெமதே, மராத்திய இலக்கியத்தில் நிறைய சாதனைகள் படைத்தவர். 1963ல் அவர் எழுதிய கோசலா (கூட்டுப்புழு) என்ற நாவல் மராத்திய நாவல் பரிமாணங்களையே மாற்றியமைத்தது.

பத்து பேர் அடங்கிய 50வது ஞானபீட விருது தேர்வுக்குழுவின் தலைவரான நம்வார் சிங் புதுதில்லியில் இம்முடிவை உறுதி செய்தார். இவ்விருது வரும் ஏப்ரல் மாதம் எழுத்தாளருக்கு வழங்கப்பெறும். இதற்குமுன் மராத்தியில் இவ்விருதினை 1974ல் வி.எஸ். காண்டேகர், 1988ல் ஷிர்வாத்கர் (எ) குஸ்மகராஜ் மற்றும் 2003ல் கோவிந்த் கராண்டிகார் (எ) விந்தா கராண்டிகார் ஆகியோர் பெற்றுள்ளனர்.

2014 ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலச்சந்திர நெமதே, நாவலாசிரியர், கவிஞர், விமர்சகர், கல்வியாளர் , 1960களின் பிற்பகுதிகளில் சிறுபத்திரிகை செயல்பாடுகளை தலைமையேற்று நடத்தியவர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். தன் வாழ்நாள் முழுவதும் இலக்கிய இயக்கங்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பாலச்சந்திர நெமதேவுக்கு என இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரு தனி இடம் உண்டு.

ஹூல், பிதார்(1967), ஜாரிலா(1977) மற்றும் ஃசூல்(1979) ஆகிய நாவல்களையும், கவிதைத் தொகுப்புகள் மற்றும் பல்வேறு விமர்சனக் கட்டுரைகளையும் குறிப்பிடும்படியாக எழுதியுள்ளர். தீக ஸ்யம்வரா என்ற விமர்சன நூலுக்காக 1991ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. மேலும் 2011ல் பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x