Published : 15 Jun 2014 03:31 PM
Last Updated : 15 Jun 2014 03:31 PM

ம.பி.யில் பயங்கரம்: பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கணவர் உள்பட 10 பேர் கைது

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் உள்பட 10 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்.

அத்துடன், சிறு வயது மகனின் கண் முன்னால் நிர்வாணக் கோலத்தில் வலம்வரச் செய்யப்பட்ட அந்தப் பெண், பலவந்தமாக சிறுநீர் அருந்த கட்டாயப்பட்டுத்தப்பட்டார்.

மத்தியப் பிரதேசத்தை உலுக்கியுள்ள இந்தச் சம்பவம் குறித்து அம்மாநில போலீஸார் வெளியிட்ட தகவல்கள்:

'பிப்லாட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிலாய் கேதா என்ற இடத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்தது. பின்னர், உறவினர்களின் துணையுடன் கந்த்வேடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், ஜூன் 13-ல்தான் முறைப்படி போலீஸில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவரது உறவினர்கள் உள்பட 10 பேரை சனிக்கிழமை போலீஸ் கைது செய்தது.

தனது கணவர் உள்பட 10 பேரால் தாம் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், தன் இளம் வயது மகனின் முன்னிலையில் நிர்வாண கோலத்தில் உலவவிடப்பட்டதாகவும் தனது புகாரில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாகத்துக்குத் தண்ணீர் கேட்ட தன்னிடம், சிறுநீர் அருந்தக் கட்டாயப்படுத்தியதாகவும் அவர் தனது புகாரில் விவரித்துள்ளார்.

கூட்டுப் பாலியல் பலாத்காரம், வன்கொடுமைக்கு ஆளாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய பிரதேச போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, நிலத் தகராறு காரணமாகவே, முன் விரோதம் காரணமாக, தனது மனைவியும், அவரது உறவினர்களும் பொய் வழக்கு போட்டுள்ளதாக, அந்தப் பெண்ணின் கணவர் கூறியிருக்கிறது.

தற்போது, மருத்துவப் பரிசோதனைக்கும், சிகிச்சைக்காகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச நிகழ்வு, பொள்ளாச்சி பயங்கரத்தைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. நாடு தழுவிய அளவில், பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான குரல்கள் வலுவுற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x