Published : 11 Mar 2017 12:14 PM
Last Updated : 11 Mar 2017 12:14 PM
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி செய்த இரண்டரை வருடகால ஆட்சியின் தாக்கம் முடிவுகளில் தெரிந்துள்ளதாக பாஜகவின் எம்பியான யோகி ஆதித்யநாத் கருத்து கூறியுள்ளார். ஐந்து மாநில தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 287 மற்றும் உத்தராகண்டில் 55 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஆதித்யநாத் கூறுகையில், "உபியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு முடிவு பெற்றுள்ளது. பிரதமர் நரேந்தர மோடி இரண்டரை வருடகாலத்தில் மத்தியில் நடத்திய ஆட்சியின் தாக்கம் உபி, உத்தராகண்டில் ஏற்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் பாஜக செய்த பிரச்சாரம் பலன் அளித்துள்ளது. இதன்மூலம், அகிலேஷ்-ராகுல் கூட்டணி மற்றும் மாயாவதி கட்சியையும் உ.பி.வாசிகள் முற்றிலும் நிராகரித்துள்ளன. உ.பி.யின் முதல்வரை பாஜகவின் ஆட்சிமன்றக்குழு கூடி முடிவெடுக்கும். இதன் முடிவை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வோம்.
பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து பிரதமர் மோடி வகுத்த தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன" எனத் தெரிவித்தார்.
உ.பி.யின் பிரபல சாதுவான ஆதித்யநாத் கோரக்பூர் மக்களவை தொகுதியின் பாஜக உறுப்பினராக உள்ளார். இந்து யுவவாஹினி மோர்ச்சாவின் நிறுவனரான இவர் கிழக்குப்பகுதி உ.பி.யில் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாகராக அமர்த்தப்பட்டிருந்தார். உ.பி.யின் பாஜக முதல்வர் போட்டியில் யோகி ஆதித்யநாத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT