Published : 29 Jul 2016 06:19 PM
Last Updated : 29 Jul 2016 06:19 PM
போதை மருந்து ஊழல் விவகாரத்தில் பஞ்சாப் வருவாய்த் துறை அமைச்சர் பிக்ராம் சிங் மஜிதியா மீது தாக்குதல் தொடுத்த அரவிந்த் கேஜ்ரிவால், ‘புதிய பஞ்சாபை’ உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.
மஜிதியா தொடுத்த அவதூறு வழக்கில் இன்று ஜாமீன் பெற்ற அரவிந்த் கேஜ்ரிவால், “மஜிதியா முடிந்தால் என்னை 6 மாதங்களுக்குள் கைது செய்யட்டும். இல்லையென்றால் நான் அவரை 6 மாதங்களில் கைது செய்வேன்.
அவர்கள் மீது உள்ள ஒவ்வொரு வழக்கிற்கும் பஞ்சாப் மக்கள் பழிவாங்குவார்கள். வரும் தேர்தலில் மஜிதியாவை மக்கள் பழிவாங்குவார்கள். 6 மாதங்களுக்குப் பிறகு நான் புதிய பஞ்சாபை உருவாக்குவேன்.
நான் அவர் புகழுக்குக் களங்கம் விளைவித்ததாக குற்றம்சாட்டுகிறார், அவர் என்ன தைரியத்தில் அப்படி கூறுகிறார்?
நான் உங்களிடம் கேட்கிறேன் பஞ்சாபில் போதை மருந்து டீலர் யார்? நான் அவரை கேட்க விரும்புகிறேன், இன்னும் எத்தனை வாய்களைத்தான் நீங்கள் அடைக்க முடியும்? நான் பஞ்சாப் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட போது பொய் வழக்குகளைப் போட்டு அச்சுறுத்துவதாகக் கூறினார்கள்
அவரும் பாதல்களும் எனக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர முடியும் எனில், அவர்கள் ஆம் ஆத்மிக்கு என்ன செய்ய முடியும் என்பதும் எனக்கு புரிகிறது.
கோர்ட் எனக்கு அழைப்பாணை விடுத்தது அதற்காக இங்கு வந்தேன். நான் டெல்லியின் முதல்வர். எனக்கு நிறைய விஷயங்களில் கடவுளின் ஆசி உள்ளது, ஆனால் ஒரு சாமானிய மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால் அவனது ஒட்டுமொத்த வாழ்வும் சீரழிகிறது. ஆனால் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன், உங்களது பொய் வழக்குகள் என்னை ஒன்றும் செய்து விட முடியாது.
இவ்வாறு கூறினார் கேஜ்ரிவால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT