Last Updated : 04 Jun, 2014 08:36 AM

 

Published : 04 Jun 2014 08:36 AM
Last Updated : 04 Jun 2014 08:36 AM

பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா அளித்த மனுவின் முக்கிய அம்சங்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். அப்போது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய 65 பக்க மனுவையும் கொடுத்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருநாள் பயணமாக செவ்வாய்க் கிழமை டெல்லி வந்திருந்தார். சாணக்யபுரியில் உள்ள புதிய தமிழக அரசு இல்லத்தில் தங்கிய அவர், பிற்பகல் 1 மணியளவில் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்று, குடியரசுத் தலைவரை சந்தித்து சிறிதுநேரம் உரையாடினார். பின்னர், தமிழக அரசு இல்லத் துக்கு திரும்பிய அவர், பிற்பகல் 3.30 மணியளவில் தெற்கு பிளாக் கில் உள்ள பிரதமர் அலுவலகத் துக்குச் சென்று, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, அரை மணி நேரம் அவருடன் உரையாடினார். அப்போது தமிழக நலன் சார்ந்த, 65 பக்க கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவரிடம் சமர்ப்பித் தார். பின்னர் அங்கிருந்து தமிழக அரசு இல்லத்துக்கு திரும்பினார்.

காவிரி நீர் பிரச்சினை

முதல்வர் ஜெயலலிதா அளித் துள்ள மனுவில் உள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு 5.2.2007-ல் வெளிவந்தது. அந்த தீர்ப்பு, 19.2.2013-ல் மத்திய அரசி தழில் வெளியிடப்பட்டது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இடைக்கால கண்காணிப்பு குழுவால் பய னில்லை. எனவே, காவிரி நிர்வாகக் குழுவையும், காவிரி நீர் வரையறைக் குழுவையும் விரைந்து அமைக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 7.5.2014-ல் உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதற்காக அமைக் கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு உடனே உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

நெய்யாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிட கேரளாவுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். நதிகளை இணைக்க சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். மாநிலங்கள் இடையே யான அனைத்து நதிகளும் தேசியமயமாக்கப்பட வேண்டும். அவினாசி அத்திக்கடவு, பெண்ணையாறு பாலாறு நெடுங்கல் அணைக்கட்டு, காவிரி குண்டாறு இணைப்புகளை செயல்படுத்த வேண்டும். காவிரிப் படுகை நவீனமயமாக்கும் ரூ.11,421 கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்னை

இலங்கை இனப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும். தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த இந்தியா உதவ வேண்டும்.

பாக் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரி மையை நிலைநிறுத்த வேண்டும்.

கச்சத்தீவு

ராமேசுவரம் அருகே 285 ஏக்கர் பரப்பளவுள்ள கச்சத்தீவு தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட் டத்தின் கீழ் இருந்தது. கச்சத்தீவு முதலில் ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற் கான ஆவணங்களும் உள்ளன. கச்சத்தீவை சுற்றிலும் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இருந்தது. கடந்த 74, 76-ம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப் பட்டு, தமிழக மீனவர்களின் உரிமை பறிபோனது.

கடந்த 91-ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ளாமல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது சட்டத்தை மீறிய செயல். இந்த ஒப்பந்தம் செல்லாது. இந்த ஒப்பந்தத்தைக் காட்டி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் கள் தாக்கப்படுகின்றனர். எனவே, அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும்.

15 சதவீத மின்சாரம்

தமிழகத்தில் உற்பத்தி செய்யப் படும் மின்சாரத்தில் ஒதுக்கீடு செய் யப்படாத 15 சதவீத மின்சாரத்தை முழுமையாக தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும். சத்தீஸ்கரில் இருந்து தமிழகத்தில் உள்ள புகலூருக்கான 6 ஆயிரம் மெகா வாட் மின்தொகுப்பு இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் ரூ.2,250 கோடி ‘பசுமை மின் தடம்’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பாசனம், சர்வ சிக் ஷா அபியான், கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்ட திட்டங்களில் மத்திய அரசு தர வேண்டிய ரூ.1,576 கோடியை உடனே ஒதுக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் அனைவரையும் சேர்க்க வேண்டும். அல்லது நகர்ப்புறங்களில் 75 சதவீத மக்களை இத்திட்டத்தில் உள் ளடக்கி செயல்படுத்த வேண்டும்.

மண்ணெண்ணெய் ஒதுக்கீடு

மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மாதத்துக்கு 65,140 லிட்டராக உயர்த்த வேண்டும். அரசுப் போக்குவரத்துக்கு வாங்கப்படும் டீசலுக்கான கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பெட் ரோலியப் பொருட்கள் விலை அடிக்கடி உயராமல் நிலைப்படுத்த வேண்டும்.

போலீஸ் துறை நவீனமயத் துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மெட்ரோ ரயில் திட்டங் களுக்கான ஒப்புதலை அளித்து உரிய நிதியை ஒதுக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலை வலி யுறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x