Last Updated : 27 Apr, 2015 12:14 PM

 

Published : 27 Apr 2015 12:14 PM
Last Updated : 27 Apr 2015 12:14 PM

பவானி சிங் நியமன வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சந்தேகங்கள்

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது - அதேநேரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. | முழுமையான செய்தி:>ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது; மறு விசாரணை இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு |

இந்தத் தீர்ப்பு, கர்நாடக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செல்லாது என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று (திங்கள்கிழமை) வழங்கியுள்ள தீர்ப்பு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகங்கள் என்ன?

பவானி சிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது முரண்பட்ட தீர்ப்பாக இருக்கிறது.

அதுபோலவே, அன்பழகன் தரப்பு 90 பக்கங்களிலும், கர்நாடக அரசு தரப்பு 50 பக்கங்களிலும் நாளைக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே, ஜெயலலிதா மேல்முறையீட்ட்டு வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதிபதி ஹெச்.எல்.தத்து கூறியதே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதே பாணியில், தற்போது பவானி சிங் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வும் எழுத்துப் பூர்வ வாதத்துக்கு கால நிர்ணயம் செய்துள்ளது. எத்தனைப் பக்கங்களில் வாதம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன் இத்தகைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதா என ஆராயும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கர்நாடக நீதிமன்ற வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தயார் நிலையில் திமுக:

இதற்கிடையில், பவானி சிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், மேல் முறையீட்டு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக திமுக தரப்பு வழக்கறிஞர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எழுத்துப்பூர்வ வாதமும் தயார் நிலையில் இருப்பதாகவும். 80 பக்கங்களில் வாதம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தீர்ப்பு எப்போது?

பவானி சிங் நியமனத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வழக்கில், தீர்ப்பு வழங்க நீதிபதி குமாரசாமிக்கு மே 12 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், மே 12-க்குப் பிறகே தீர்ப்பு வெளியாகும் என கர்நாடக நீதிமன்ற வட்டாரம் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x