Last Updated : 22 Feb, 2017 08:50 PM

 

Published : 22 Feb 2017 08:50 PM
Last Updated : 22 Feb 2017 08:50 PM

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா: குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நேரில் ஒப்படைத்தது தமிழக அரசு

'நீட்' தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ள நிலையில், இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக இதனை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அதிகாரிகள் இன்று நேரில் ஒப்படைத்தனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு (நீட்) நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. வரும் மே 7-ம் தேதி முதல் இத்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்காக, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றினார். பிறகு இந்த மசோதா மாநில ஆளுநரின் ஒப்புதலுக்குச் சென்றது.

இந்நிலையில் ஆளுநர் அனுமதிக்குப் பிறகு இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தரப்பட்டுள்ளது. இந்த மசோதாவை தமிழக சுகாதாரத் துறை துணை செயலாளர் கந்தசாமி, சார்பு செயலாளர் செல்வராஜ் ஆகியோர் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நேரில் ஒப்படைத்தனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே தமிழக அரசின் 'நீட்' மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.

இனி மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகத்தின் 'நீட்' மசோதாவை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு அனுப்பிவைத்து அவற்றின் கருத்துகளை கேட்கும்.மனிதவள மேம்பாட்டுத் துறை, சுகாதாரத் துறை, சட்டத்துறையின் இரு பிரிவுகள் (Legislative and Legal Affairs) ஆகியவற்றுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும்.

இவற்றின் கருத்துகளை பெற்ற பிறகு உள்துறை அமைச்சகம் தனது கருத்தையும் சேர்க்கும். இறுதியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். இந்த ஒப்புதலுக்குப் பிறகே 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும்.

மத்திய அரசு ஏற்குமா?

இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக 'தி இந்து'விடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ''தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் 'நீட்' தேர்வு தொடர்பாக மசோதாவைநிறைவேற்றி அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைப்பது கடினம். தேசியஅளவிலான பொது நுழைவுத் தேர்வை பொறியியல்படிப்புக்கும் அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. எனவே இந்த மசோதாவை மத்திய அரசு ஏற்காதுஎன கருதுகிறோம்'' என்று தெரிவித்தனர்.

வழக்கமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் அனுமதி கிடைப்பதில்லை. இந்நிலையில் மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டும் அதனை தமிழக அரசுக்கு மத்திய அமைச்சகங்கள் திருப்பி அனுப்பவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x