Last Updated : 08 Apr, 2015 01:30 PM

 

Published : 08 Apr 2015 01:30 PM
Last Updated : 08 Apr 2015 01:30 PM

நிலச் சட்டம் நிறைவேறினால் நிலமில்லா 30 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு: ஜேட்லி தகவல்

நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறினால், தொழில் துறை மூலம் நிலம் இல்லாத 30 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

சிறிய தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சம் வரையில் கடன் கொடுக்க வழிவகுக்கும் முத்ரா வங்கியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார்.

ரூ.20 ஆயிரம் கோடி நிதி முதலீடு கொண்ட முத்ரா வங்கியின் முதல் கிளையை தொடங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

அப்போது, "நிலம் இல்லாத ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நிலம் கையகபடுத்தும் மசோதா நிறைவேறினால், நாட்டில் தொழில் நிறுவனங்கள் பெருகும். இதன்மூலம் நிலம் இல்லாத 30 கோடி ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நிதி வசதி கிடைக்காத சிறு தொழில் முனைவோரின் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காகவே முத்ரா வங்கி நிறுவப்படுகிறது.

நாட்டில் தற்போது 5.77 கோடி சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் கடன் வசதி இன்றி அவதிப்படுகின்றன. இத்தகைய சிறு தொழில்களை நம்பிதான் நாட்டிலுள்ள 20 சதவீத மக்கள் பிழைக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் வசரப்பிரசாதமாகவே முத்ரா வங்கி திகழும்.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நான்கே வாரங்களில் இந்த வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது" என்றார் அருண் ஜேட்லி.

முத்ரா வங்கி:

நாட்டில் மொத்தம் 5.77 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படாமல் நியாயமான வட்டி கிடைக்க வகை செய்வதற்காக முத்ரா வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறு, குறு தொழில்கள் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாகத் திகழ்வதால் எளிதில் கடன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்ரா வங்கிக்கு முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி நிதியும், கடன் வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் ஜேட்லி தெரிவித்திருந்தார். கடன் உதவித் திட்டங்களுக்கு சிஷு, கிஷோர், தருண் என பெயரிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் திட்டங்கள் சிஷு எனப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்டு ரூ.5 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் கிஷோர் எனப்படும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் தருண் எனப்படும். பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இந்தக் கடன் உதவித் திட்டங்கள் அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சலூன், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் பயன் பெறலாம். மகளிர் தொழில் முனைவோரும் இத்திட்டம் மூலம் கடன் பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x