Published : 29 Jul 2014 08:14 AM
Last Updated : 29 Jul 2014 08:14 AM
நித்யானந்தாவை ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது செய்து ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என கர்நாடக போலீஸாருக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது அவரது முன்னாள் பக்தை ஆர்த்திராவ், ராம்நகர் போலீஸில் 2011-ம் ஆண்டு பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அது தொடர் பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் பதிவாகியுள் ளதால் போலீஸார் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவெடுத்தனர். இதற்கு நித்யா னந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆண்மை பரிசோதனை செய்ய ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்நிலையில், நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு நீதிபதி ஹொசகவுடர் முன்பு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா ஆஜராகவில்லை. இதனையடுத்து, ''ராம்நகர் போலீஸார் நித்யானந்தாவை வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் கைது செய்து, ஆண்மை பரிசோதனை செய்து முடிக்க வேண்டும். 7-ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்'' என கூறிய நீதிபதி ஹொசகவுடர், ஜாமீனில் வெளியே வரமுடியாத கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் திங்கள்கிழமை மாலை நித்யானந்தாவை தேடி பிடதியில் உள்ள 'தியானபீடம்' ஆசிரமத்துக்கு சென்றனர். அவர் ஹரித்வாருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளதாக அவரது சீடர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் தற்போது இருக்கும் இடத்தை அறிந்து, கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT