Published : 02 Jan 2017 08:48 PM
Last Updated : 02 Jan 2017 08:48 PM

திருப்பதியில் 104-வது இந்திய அறிவியல் மாநாடு: செவ்வாய் அன்று மோடி தொடங்கி வைக்கிறார்

104-வது இந்திய அறிவியல் மாநாடு திருப்பதியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் சங்கமிக்கும் இந்திய அறிவியல் மாநாட்டின் 104-வது மாநாடு திருப்பதியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்த மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற 6 விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். இதைத் தவிர 20000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உலகெங்கிலும் இருந்து பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டின் மூலம் விஞ்ஞானிகளுடன் ஆராய்ச்சியாளர்கள் கலந்துரையாட பெரும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கான உந்துதலை இந்த மாநாடு வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 34 அரங்குகளில் தொடர்ந்து 5 நாளும் பல்வேறு தலைப்புகளில் அறிவியல் கருத்தரங்குகள் மாநாடுகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் குறித்தும் இந்த மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியின் போது விவாதிக்கப்படும். இந்தியாவில் தொழில் தொடங்குதல் குறித்தும், அதற்கு விஞ்ஞானிகள் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்த ஆண்டு மாநாட்டின் மையக் கரு, தேசிய மேம்பாட்டிற்கு அறிவியல் தொழில்நுட்பம் என்பதாகும். மாநாட்டை தொடங்கி வைத்தபின் பிரதமர் நரேந்திர மோடி, 50 புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். இதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும் இடம்பெறுகின்றனர். அவர்களை பிரதமர் கவுரவிக்கிறார்.

இந்த மாநாட்டில் ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x