Published : 30 Nov 2015 07:34 PM
Last Updated : 30 Nov 2015 07:34 PM
சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய ‘சாத்தானின் கவிதைகள்’ நாவலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு தடை செய்தது தவறு என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரம் பேசும்போது, “சல்மான் ருஷ்டியின் நாவல் மீது தடை விதித்தது தவறு என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை” என்றார்.
ப.சிதம்பரம் கருத்து தெரிவித்த சில மணி நேரத்தில் சல்மான் ருஷ்டி தனது ட்விட்டர் பதிவில், “இதை ஒப்புக்கொள்ள 27 ஆண்டுகள் ஆகியுள்ளது. இத்தவறு சரிசெய்யப்பட இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
ப.சிதம்பரம் கருத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் கூறும்போது, “ப.சிதம்பரம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. தனி ஒருவரின் கருத்து காங்கிரஸ் கருத்து ஆகாது. காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவானது. சமூக ஒற்றுமைக்கு எதிரான தாக்குதலை நாடு தற்போது எதிர்கொள்கிறது” என்றார்.
பிரிட்டனில் வசிக்கும் சல்மான் ருஷ்டி மும்பையில் பிறந்தவர். இவரது 4-வது நாவலான சாத்தானின் கவிதைகள் இஸ்லாமை பழி தூற்றுவதாக கடும் எதிர்ப்பு எழுந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT