Last Updated : 01 Oct, 2014 10:49 AM

 

Published : 01 Oct 2014 10:49 AM
Last Updated : 01 Oct 2014 10:49 AM

ஜெயலலிதா சிறப்பு மனு மீதான விசாரணையை அக்.7-க்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர் நீதிமன்றம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனு மற்றும் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ரத்னகலா விசாரணையை ஒத்திவைத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரை அடுத்துள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

3 நாட்கள் முயற்சி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க‌ கோரியும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, தீர்ப்பு மற்றும் அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் தலா 4 மனுக்கள் தாக்கல் செய்தனர். இவை தவிர பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரி நால்வரும் தலா 2 மனுக்களை கடந்த 27-ம் தேதி தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 28-ம் தேதி நீதிபதி ரத்னகலா முன்பு விசா ரணைக்கு வந்தது. அரசு வழக்கறி ஞராக‌ நியமித்ததற்கான அரசாணை வழங்கப்படாததால், இவ்வழக்கில் பவானி சிங் ஆஜராக மறுத்துவிட்டார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் தேசாயை சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து இந்த மனு அவசரகால சிறப்பு வழக்காக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் மனுக்களும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 11-வது நீதிமன்ற ஹாலில் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா முன்னிலையில் விசாரணைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் 1000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும், அதிமுக நிர்வாகிகளும் நிரம்பி வழிந்தனர். காலை 10 ம‌ணிக்கு நீதித்துறை பதிவாளர் தேசாய் நீதிமன்றத்தை பார்வையிட்டார்.காலை 10.20 மணிக்கு ஜெயலலிதா தரப்பில் ஆஜராவதற்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தனது உதவியாளர்கள் 3 பேருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் பி.குமார், நவநீத கிருஷ்ணன், அமித் தேசாய், அம்ஜத் பாஷா ஆகியோரும் வந்தனர்.

மூன்றே நிமிடங்கள்

சரியாக காலை 10.30 மணிக்கு நீதிபதி ரத்னகலா தனது இருக்கையில் வந்து அமர்ந்தும்,''அரசு வழக்கறிஞர் பவானி சிங் எங்கே?''என கேட்டார்.அப்போது அவர் நீதிமன்றத்தில் இல்லாததால் சலசலப்பு ஏற்பட்டது.உடனே நீதிபதி, தான் கூறுவதை எழுதுமாறு நீதிமன்ற ஊழியருக்கு பணித்தார். அப்போது பேசிய ராம்ஜெத்மலானி, ''தயவு செய்து சிறிது நேரம் காத்திருங்கள். வழக்கை நடத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இங்கு இருக்கிறார்கள். சட்டப்படி அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றாலும் வழக்கை விசாரிக்கலாம்.முதலில் வழக்கை விசாரியுங்கள்''என கண்டிப்பான குரலில் கோரினார்.

சரியாக 10.32 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு வழக்கறி ஞர்கள் பவானி சிங், முருகேஷ் எஸ்.மரடி ஆகியோர் நீதிமன்றத் துக்குள் நுழைந்தனர். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவுக்கு பவானிசிங் பதில் மனு தாக்கல் செய்தார். அப்போது அவரிடம்,''உங்களுக்கு அரசாணை கிடைத்துவிட்டதா? வாதிட தயாராக இருக்கிறீர்களா?''என நீதிபதி கேட்டார். அதற்கு அவர்,''அரசாணை கிடைத்துவிட்டது.வாதிட தயாராக இருக்கிறேன்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி ரத்னகலா பேசும்போது, ''இந்த வழக்கை விசாரிக்க விடுமுறைகால நீதிபதிக்கு அதிகாரம் இல்லை.வழக்கமான உயர் நீதிமன்ற நீதிபதிதான் விசாரிக்க வேண்டும். எனவே, வழக்கை வரும் 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்'' என கூறிவிட்டு, தனது இருக்கையில் இருந்து எழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராம்ஜெத்மலானி, ''தயவு செய்து 5 நிமிடங்கள் வழக்கை விசாரியுங்கள். இதில், ஆஜராகத்தான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன்'' என்றார். அதனை ஏற்காமல் நீதிபதி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். இவ்வழக்கில் இரு தினங்கள் ஆஜராகியும் விரிவான விசாரணை நடைபெறாததால் ராம்ஜெத்மலானி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x