Last Updated : 27 Mar, 2015 10:17 AM

 

Published : 27 Mar 2015 10:17 AM
Last Updated : 27 Mar 2015 10:17 AM

ஜெகன்மோகன் சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய ரூ.132 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், மேலும் ரூ.132 கோடி மதிப்பி லான சொத்துகளை அமலாக்கத் துறையினர் நேற்று முடக்கினர்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக ஜெகன்மோகன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக ஜெகன் மற்றும் இந்து புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இந்துகுரி ஷ்யாம் பிரசாத் ரெட்டி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது, ஷ்யாம் பிரசாத்துக்குச் சொந்தமான குழும நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதாகவும் அதற்கு பிரதிபலனாக ஜெகனின் குழும நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு ஜெகன், ஷ்யாம் மற்றும் சிலர் மீது ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகம் சட்டவிரோத பணப்பரி வர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதுகுறித்து அமலாக்கத் துறை இணை இயக்குநர் கேஎஸ்விவி பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஷ்யாம் பிரசாத்துக்குச் சொந்தமான குழும நிறுவனங்களின் நகரும் மற்றும் நகரா சொத்துகள் பரிவர்த்தனையில் முறைகேடு நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, அந்த நிறுவனங்களின் ரூ.132 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

இந்த வழக்கில் ஏற்கெனவே, ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x