Last Updated : 14 May, 2015 08:21 AM

 

Published : 14 May 2015 08:21 AM
Last Updated : 14 May 2015 08:21 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்

சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பாக தொடங்கப்பட்டு பல்வேறு திருப்பங்களைக் கடந்த சொத்துக் குவிப்பு வழக்கு, மே 11-ம் தேதி குமாரசாமியால் முடித்து வைக்கப் பட்டும், தீர்ப்பு குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இவ்வழக்கில் இருந்து ஜெயலலிதாவுக்கு கிடைத் திருக்கும் விடுதலை எளிதாய் கிடைத்தது அல்ல.

விடுதலை தந்த 919 பக்க தீர்ப்பின் ஒவ்வொரு எழுத்திலும் முகம் தெரியாத பல வழக்கறிஞர்க‌ளின் உழைப்பு இழையோடிருக்கிறது. சட்டத்தில் இருந்த அத்தனை பிரிவுகளிலும் நுழைந்து வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிட்ட விருத்தால ரெட்டியாரில் தொடங்கி ஜோதி, கே.சுப்பிரமணியம், தீனசேனன், நவனீதகிருஷ்ணன், பி.குமார் என வழக்கறிஞர்களின் பட்டியல் நீள்கிறது. இதில் உச்ச நீதிமன்றத் தில் வாதாடிய ஃபாலி எஸ்.நாரிமன், ராம்ஜெத்மலானி, ஹரீஷ் சால்வே, கேடிஎஸ் துள்சி உள்ளிட்ட புகழ் பெற்ற மூத்த வழக்கறிஞர்களும் அடங்குவர்.

இதில் கர்நாடக உயர் நீதி மன்றத்தில் வாகை சூடிய பி.குமார் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவின் உழைப்பு மிக முக்கிய மானது. நீதிபதிகளிடமும், அரசு வழக்கறிஞர்களிடமும், ஊடகங் களிடமும் ஆயிரம் முறை திட்டு வாங்கினாலும், திட்டமிட்டு உழைத்ததால் வெற்றி பெற்றிருக் கிறார்கள். அவ்வாறு தடம் பதித்த வழக்கறிஞர்களில் முக்கியமானவர் பி.குமார்.

ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் அவருக்கு சட்ட ஆலோசகராக இருந்தவர். 1996-ல் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதில் இருந்து இப்போது வரை ஜெயலலிதா தரப்புக்காக வாதாடிக் கொண்டிருப்பவர். வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி, குற்றவியல் வழக்குகளில் ஆழ்ந்த அனுபவமுள்ள வழக்கறிஞர்களின் பி.குமார் முக்கியமானவர்.

செப்டம்பர் 27, 2014 அன்று பரப்பன அக்ரஹாரா சிறை நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா, “சட்டப்படி ஜெயலலிதாவுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க முடியும்'' என முடிவு செய்தார். பி.குமார் எடுத்து வைத்த 4 மணி நேர வாதம் தான் தண்டனையை 4 ஆண்டாக குறைத் தது. மேல்முறையீட்டில் நாட்டின் மூத்த வழக்கறிஞர்களான ராம்ஜெத் மலானி, பாலி எஸ்.நாரிமன், நாகேஸ்வர ராவ் ஆகியோர் களமிறக்கப்பட்ட‌னர். அவர்களுக்கு வழக்கு விவரங்களை முழுமையாக விளக்கியவர் பி.குமார். ஜெயலலிதாவின் விடுதலைக்காக நாகேஸ்வர ராவ் சுமார் 47 மணி நேரம் நின்றுகொண்டே வாதாடினார் என்றால், பி.குமார் அவருக்கு அத்தனை பாயிண்டுகளையும் கொடுத்தார்.

நீதிபதி குமாரசாமி எப்போதெல்லாம் கேள்வி கேட்கிறாரோ, அப்போதெல்லாம் குமார் எழுந்து சந்தேகங்களை களைவார். சில நேரங்களில் அரசு வழக்கறிஞராக இருந்த பவானிசிங்கை கேட்டாலும், தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரி சம்பந்தத்தை கேட்டாலும் பி. குமார் தான் பதிலளிப்பார்.

ஜெயலலிதாவின் மேல்முறை யீட்டுக்காக சுமார் 3 லட்சம் பக்கங் கள் கொண்ட ஆவணங்களை 3 மாதங்களில் தயாரித்து வழக்கை 3 மாதங்களில் முடித்தார். பெங்களூ ருவில் 8 ஆண்டுகள் ஹோட்டல் உணவை உண்டு வாழ்ந்து வழக்கை வென்றிருக்கிறார். தனது மனைவியையும், மாமியாரையும், வேறு சில ரத்த உறவுகளையும் இழந்த போதும் விடுமுறை எடுக்காமல் செயல்பட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கின் வரலாற்றிலும் சரி..ஜெயலலிதாவின் வெற்றிக்கு வித்திட்டவர்களின் பட்டியலிலும் சரி..பி.குமாரின் பங்கு மிக மிக முக்கியமானது!

(இன்னும் வருவார்கள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x