Published : 07 Jul 2017 09:03 AM
Last Updated : 07 Jul 2017 09:03 AM

சொத்துக்குவிப்பு தீர்ப்பு: சசிகலாவின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை?

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடந்த 2015-ம் ஆண்டு விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பளித்தனர்.

ஜெயலலிதா காலமானதால் அவர் மீதான வழக்கை முடித்து வைப்பதாகவும் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை யும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவித்தனர்.

இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த ஏப்ரம் மாதம் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவில் சசிகலா தரப்பினர், “அரசு ஊழியரான ஜெயலலிதா வருமா னத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக நிரூபிக்கப்பட்ட வழக்கிலே பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எங்களுக்கு (சசிகலா தரப்பு) தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது. அரசு ஊழியரான ஜெயலலிதாவை விடுவித்திருப்பதன் மூலம், அரசு ஊழியர் அல்லாத எங்களை ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியாது. ஜெயல லிதாவைப் போல எங்களையும் இவ்வ‌ழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தாக்கல் செய்யப் பட்ட நிலையில் வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் கடந்த மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். எனவே அதே நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு சீராய்வு மனு விசாரிக்கப்படுமா? அல்லது புதிய நீதிபதி நியமிக்கப்படுவாரா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை முடிந்ததால், சசிகலா தரப்பின் சீராய்வு மனு விரைவில் விசாரிக்கப்படும் என தகவல் வெளியானது.

உச்ச நீதிமன்றத்தின் இணைய தளத்தில், “சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனு வெள்ளிக்கிழமை விசாரணை பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.எம்.கன்வில்கரின் சேம்பரில் நடைபெறும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

சசிகலா தரப்பின் சீராய்வு மனுவை விசாரிக்க புதிதாக நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அமிதவராய் அந்த அமர்வுக்கு தலைமையாக செயல்படுவார். நீதிபதியின் சேம்பரில் நடக்கும் விசாரணை என்பதால் பெரிதாக வழக்கறிஞர் களின் வாதம் இடம்பெறாது. எனவே சீராய்வு மனு குறித்த இறுதி முடிவு தான் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x