Last Updated : 11 Jan, 2017 05:05 PM

 

Published : 11 Jan 2017 05:05 PM
Last Updated : 11 Jan 2017 05:05 PM

சமாஜ்வாதி கட்சி உடைய அனுமதிக்க மாட்டேன்: முலாயம் சிங் யாதவ் உறுதி

சமாஜ்வாதி கட்சியை இரண்டாக உடைய விடமாட்டேன் என கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். அதே சமயம் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்கும்படி தனது மகன் அகிலேஷ் யாதவுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.

லக்னோவில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் முலாயம் சிங் யாதவ் பேசியதாவது:

அந்நிய கட்சியின் தலைவரை 3 முறை சந்தித்து பேசியது யார் என்பது எனக்குத் தெரியும். மகன் மற்றும் மருமகளை காப்பாற்றவே அவர் (ராம்கோபால் யாதவ்) அந்த தலைவரை சந்தித்தார். இவர் என்னை அணுகியிருக்க வேண்டும், நான் அவர்களைக் காப்பாற்றியிருப்பேன். கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தேன். கட்சியில் ஒற்றுமை வேண்டும் என்று நான் விரும்புகிறேன். புதிதாக எந்தக் கட்சியையும் தொடங்கவும் மாட்டேன், சின்னத்தையும் மாற்ற மாட்டேன்.

அகில பாரதிய சமாஜ்வாதி கட்சியை யார் உருவாக்கினார்கள் என்பதையும் நான் அறிவேன். மோட்டர் சைக்கிள் தேர்தல் சின்னத்தை விரும்புவர்கள் யார் என்பதையும் அறிவேன். அகிலேஷுக்காக நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். என்னிடம் வேறு எதுவும் இல்லை. தொண்டர்களை மட்டுமே உடன் வைத்துள்ளேன். எமெர்ஜன்சி காலக்கட்டங்களில் நான் சமாஜ்வாதியை அமைத்தேன் அப்போது அகிலேஷுக்கு 2 வயது.

அகிலேஷ் தற்போது முதல்வராக உள்ளார். அடுத்த முறையும் அவரே முதல்வராக பதவியேற்பார். மோசமான நபர்களை அகிலேஷ் ஏன் பின் தொடர வேண்டும். சர்ச்சைக்குள் தன்னிச்சையாக சென்று ஏன் சிக்க வேண்டும்? என்ன நடந்தாலும் கட்சிக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

சமாஜ்வாதியின் வளர்ச்சிக்காக சிவ்பால் கடுமையாக பாடுபட்டவர். அவசரநிலை காலத்தில் அவர் கட்சிக்காக உழைத்திருக்கிறார். அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும். கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நிலையை கண்டு தொண்டர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். சமாஜ்வாதி போராட்டத்தில் இருந்து தான் பிறந்தது. எனவே தொண்டர்கள் கவலை அடையத் தேவையில்லை. கட்சியின் ஒற்றுமைக்கும் எந்த பங்கமும் ஏற்படாது. ஒருபோதும் கட்சியை இரண்டாக உடைய விட மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார். தனது சித்தப்பாவான சிவ்பாலை கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்தும், அமர் சிங்கை கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி வருகிறார். இதனை முலாயம் சிங் ஏற்க மறுத்து வருவதால் கடந்த சில மாதங்களாக சமாஜ்வாதி கட்சிக்குள் உட்பூசல் வெடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x