Published : 04 Jul 2014 09:05 PM
Last Updated : 04 Jul 2014 09:05 PM

சிபிஐ விசாரணை எதிரொலி: கோவா ஆளுநர் ராஜினாமா

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக கோவா மாநில ஆளுநர் பி.வி. வான்சூவிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதே ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த வாரம் மேற்குவங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் பதவி விலகினார். இப்போது வான்சூ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை சென்றனர். அங்கு ஆளுநர் பி.வி.வான்சூவிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

ஆளுநர் விளக்கம்

இந்த விவகாரம் குறித்து ஆளுநர் வான்சூ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளேன். இதுதொடர்பாக கடந்த 24-ம் தேதியே சிபிஐ சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகளிடம் இப்போது வாக்குமூலம் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3600 கோடிக்கு 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.

ரூ.360 கோடி லஞ்சம்

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய ரூ.360 கோடி லஞ்சம் கைமாறியதாகக் கூறப்படுகிறது. விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 13 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் 2013-ல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x