Published : 01 Sep 2014 04:25 PM
Last Updated : 01 Sep 2014 04:25 PM

குரு உத்சவ் என்பது கட்டுரைப் போட்டி: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம்

ஆசிரியர் தினம் என்பதை இனி 'குரு உத்சவ்' என்றுதான் அழைக்க வேண்டும் மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'குரு உத்சவ்' என்பது கட்டுரைப் போட்டிக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு மட்டுமே என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: 'குரு உத்சவ்' ஆசிரியர்களைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு. இதற்குக் கூட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றால் எனக்கு அது வேதனை அளிக்கிறது. அதேபோல், ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் ஆற்றும் உரையை பள்ளி மாணவர்கள் கட்டாயம் பள்ளியில் இருந்து காண வேண்டும் என எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தேவையில்லாமல் அரசியல் கட்சிகள் திரித்துக் கூறுகின்றன என்றார்.

ஆசிரியர் தினத்தை 'குருஉத்சவ்' என்று பெயர்மாற்றம் செய்யும் உத்தரவு தேசிய ஒருமைப்பாடுக்கு எதிரானது என வைகோவும், 'ஆசிரியர் நாள்' என்ற பெயரை 'குரு உத்சவ்' என மத்திய அரசு மாற்றியிருப்பது சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கும் நடவடிக்கை என பாமக நிறுவனர் ராமதாசும் கூறியுள்ளனர். மதிமுக, பாமக கட்சிகள் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக் கிழமை), திமுக தலைவர் கருணாநிதி விடுத்திருந்த அறிக்கையில்: ஆசிரியர் தினம் என்பதை இனி 'குரு உத்சவ்' என்றுதான் அழைக்க வேண்டும் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆணை, நம் மொழியை வீழ்த்த பின்னப்பட்ட சூழ்ச்சி என கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x