Last Updated : 17 Jul, 2017 07:14 PM

 

Published : 17 Jul 2017 07:14 PM
Last Updated : 17 Jul 2017 07:14 PM

குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின் பிஹாரில் மாற்றம்: மெகா கூட்டணியைக் காக்கும் முயற்சியில் லாலு

குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின் பிஹார் அரசியலில் மாற்றம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. தேஜஸ்வீ பிரசாத் யாதவ் மீதான சிபிஐ வழக்கால், பிளவுபட்ட மெகா கூட்டணியை காக்க லாலு பிரசாத் யாதவ் முயல்கிறார். இதற்காக, நிதிஷ்குமார் அமைச்சரவையில் இருந்து விலகி வெளியில் இருந்து ஆதரவளிக்க ஆலோசித்து வருகிறார்.

மத்திய ரயில்வே துறையின் முன்னாள் அமைச்சராக இருந்த போது ஊழல் நடைபெற்றதாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ 5 வழக்குகள் பதிவு செய்துள்ளது. பிஹாரின் துணை முதல்வர் தேஜஸ்வீ மீதும் பதிவான வழக்கால் அவரை பதவி விலக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை லாலுவிடமும் தனது இறுதி முடிவாக சமீபத்தில் தெரியப்படுத்தி விட்டார் நிதிஷ். இதனால், லாலு, நிதிஷ் மற்றும் காங்கிரஸ் இணைந்து உருவான மெகா கூட்டணியில் பிளவு ஏற்படத் துவங்கி உள்ளது. இதற்கு லாலு தன் மகன் பதவி விலக மாட்டார் எனக் கூறி வருவது காரணம்.

இந்த சூழலை பிஹாரின் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முயல்கிறது. இதை சாக்காக வைத்து தனது பழைய சகாவான நிதிஷுடன் மீண்டும் உறவை புதுப்பிக்க விரும்புவதாகக் கருதப்படுகிறது. பதவி விலக விரும்பாத தேஜஸ்வீ மீது நிதிஷ் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, லாலுவால் அவரது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என பாஜக எண்ணுகிறது. இந்த சூழலில் உடையும் மெகா கூட்டணியால் நிதிஷ் ஆட்சிக்கும் ஆபத்து உண்டாகும். அப்போது, தாம் வெளியில் இருந்து ஆதரவளித்து நிதிஷை காக்கலாம் என பாஜக திட்டமிடுவதாக பிஹாரில் செய்திகள் உலவுகின்றன.

இந்நிலையில், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தனிமைப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. 2019-ல் வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்தர மோடிக்கு எதிராக உருவாக்க முயலும் எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கும் ஆபத்து உருவாகும். இதை தவிர்க்க லாலு ஒரு வெளியில் இருந்து நிதிஷுக்கு ஆதரவளிக்க ஆலோசனை செய்து வருகிறார். இதன்மூலம், மெகா கூட்டணியை காப்பதுடன், பாஜகவை நிதிஷுடன் நெருங்க விடாமல் தடுக்க முடியும் எனவும் லாலு கருதுவதாக அவரது ஆர்ஜேடியினர் கருதுகின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆர்ஜேடியினர் கூறுகையில், ''குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின் எந்நேரமும் தேஜஸ்வீயை துணை முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் நீக்க வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு நடைபெற்றால் அவரது அமைச்சரவையின் ஆர்ஜேடி உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக ராஜினாமா செய்யத் தயாராக இருக்கும்படி லாலு எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், பாஜக உள்ளே நுழைந்து விடாமல் தடுக்க எங்கள் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. மெகா கூட்டணி உறுதியாக இருந்தால்தான் 2019 மக்களவை தேர்தலை எதிர்க் கட்சிகளால் எதிர்கொள்ள முடியும் என லாலுவுக்கு பல்வேறு கட்சியின் தேசியத் தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்'' எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நிதிஷின் கட்சி எம்எல்ஏக்கள் அவரது முடிவை மீறும் வகையில் எதிர்க் கட்சிகளின் வேட்பாளரான மீராகுமாருக்கு வாக்களிக்க வாய்ப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் நிதிஷை அவரது கட்சியில் சிலர் எதிர்ப்பது காரணம் ஆகும். இந்த சூழலில் லாலு வெளியில் இருந்து அளிக்கும் ஆதரவு நிதிஷின் கட்சியினர் இடையே நற்பெயரை பெற உதவும் எனக் கருதப்படுகிறது. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின் பிஹார் அரசியலில் புதிய பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணியாக இரண்டுமுறை பிஹாரில் ஆட்சி செய்தவர் நிதிஷ். கடந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து கூட்டணியில் இருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x