Published : 21 May 2014 05:25 PM
Last Updated : 21 May 2014 05:25 PM
குஜராத் மாநில முதல்வராக ஆனந்திபென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை இவர் பெறவுள்ளார்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பதவியையும் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க, பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நரேந்திர மோடி, அவரது நண்பரும், உத்தரப் பிரதேச மாநில பாஜக பொறுப்பாளருமான அமித் ஷா, பாஜக பொதுச் செயலாளர் தாவர்சந்த் கெலோட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஆனந்திபென்னை (73) பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர், ஆனந்திபென் நிகழ்த்திய ஏற்புரையில், மோடிக்கும், எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். மிகவும் உணர்ச்சிகரமான நிலையில் காணப்பட்டார். மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட ஆனந்தி பென், தற்போது அந்த மாநிலத்தின் வருவாய் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார். மோடிக்கு முன்பு முதல்வராக இருந்த கேசுபாய் படேலின் அமைச்சரவையிலும் ஆனந்திபென் இடம்பெற்றிருந்தார்.
குஜராத் முதல்வராக ஆனந்திபென் இன்று பதவியேற்கவுள்ளார். இவ்விழாவில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர். குஜராத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ள நரேந்திர மோடி, பாஜக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து வரும் திங்கள்கிழமை பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT