Published : 21 Oct 2013 04:11 PM
Last Updated : 21 Oct 2013 04:11 PM

காங்கிரஸ் எம்.பி. மசூத் தகுதி நீக்கம்

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஷீத் மசூத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக தங்களின் பதவியை இழப்பார்கள் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பதவி இழக்கும் முதல் அரசியல்வாதி இவர்தான்.

இதன் தொடர்ச்சியாக, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்களான லாலு பிரசாத் யாதவ், ஜகதீஷ் ஷர்மா ஆகியோரும் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

முன்னதாக, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கில் ரஷீத் மசூத்துக்கு (67) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

1990-ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக ரஷீத் மசூத் பதவி வகித்தார். அப்போது திரிபுரா மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசின் இடங்களில் தகுதியில்லாத மாணவர்கள் சேர்ந்து படிக்க அவர் முறைகேடாக அனுமதி அளித்தார். இதில், இருவர் ரஷீத்தின் உறவினர்கள்.

ரஷீத் மசூத் மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைகள் சட்டப் பிரிவு 120 பி (குற்றச் சதி), 420 (ஏமாற்றுதல்), 468 (மோசடி) உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த செப்டம்பர் 19-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவசரச் சட்டம்

வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தண்டனை பெற்றாலும், அவர்கள் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்த பின், தங்களின் பதவியில் தொடரலாம் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஷரத்தை நீக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக தங்களின் பதவியை இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அவசரச் சட்டம் ஒன்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்த அவசரச் சட்டத்தைக் கிழித்து எறிய வேண்டும் என்று வெகுண்டெழுந்தார். அதன் தொடர்ச்சியாக, அந்த அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x