Published : 15 Apr 2014 12:00 PM
Last Updated : 15 Apr 2014 12:00 PM
கர்நாடகத்தில் நரேந்திர மோடி படத்துடன் கூடிய 5 ஆயிரம் சேலைகள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள பாத்திரங்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகத்தில் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் யாதகிரி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் 7 பேர், யாதகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள குருநாத் ரெட்டி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
இதில் அங்கு மூட்டைகளிலும், அட்டைப் பெட்டிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,500 ‘நமோ மந்திரா' புடவைகளை பறிமுதல் செய்தனர். காட்டன், சில்க் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் கொண்ட இந்தப் புடவைகளின் அட்டைப் பெட்டிகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் படம் பொறிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், “இப்பகுதியில் பெண் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்தப் புடவைகளை பதுக்கி வைத்திருந்தாக தெரிகிறது. மாவட்ட பாஜக பிரமுகர் ஒருவரின் வேண்டுகோளின்படி, குருநாத் தனது இல்லத்தில் வைத்திருந்ததாக சொல்கிறார். 3,500 புடவைகளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் குருநாத் ரெட்டியை கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.
இதேபோல கர்நாடக மாநிலம் கோலாரில் திங்கள்கிழமை மாலை லாரியில் கொண்டுசெல்லப்பட்ட 1,835 நமோ புடவைகள், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பாத்திரங்களை உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீஸார், இந்தப் புடவைகள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT