Last Updated : 08 Mar, 2015 11:05 AM

 

Published : 08 Mar 2015 11:05 AM
Last Updated : 08 Mar 2015 11:05 AM

கருப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு மத்திய அரசு சலுகையா? - வருவாய் துறை செயலாளர் மறுப்பு

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கிய இந்தியர்கள் வரும் 2017-ம் ஆண்டுக்குள் தாமாக முன்வந்து விவரம் தர முன்வந்தால் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நேற்று கூறியதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்துரையாடல் கூட்டத்தில் கருப்புப் பணம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ள இந்தியர்கள் தாமாக முன்வந்து அதுபற்றிய விவரங்களை தெரிவிக்க ஒற்றை இசைவு சாளர முறையில் வாய்ப்பு அளிக்கப்படும். அதற்கான கால அளவு மிகக் குறுகியதாக இருக்கும். அதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்திருப்பவர்கள் தொடர்பான தகவல் தானியங்கி முறையில் வரும் 2017-ம் ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பரிமாறிக் கொள்ளப்படும். எனவே, வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தவர்கள் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு மற்றும் சொத்து வைத்துள்ள இந்தியர்கள் அதுகுறித்து கட்டாயமாக அரசுக்கு தெரிவிக்க வகைசெய்யும் சட்டம் இயற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x