Last Updated : 17 Mar, 2015 03:15 PM

 

Published : 17 Mar 2015 03:15 PM
Last Updated : 17 Mar 2015 03:15 PM

ஐஏஎஸ் அதிகாரி ரவி: கர்நாடகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள்

பெங்களூருவில் வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் போலீஸார் சந்தேகித்துள்ளது.

மணல் கடத்தலுக்கு எதிராக திறம்பட செயல்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, கோலார் மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். | விரிவான செய்தி:>மணல் கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட பெங்களூரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்ம மரணம்: சிபிஐ விசாரணை கோரி கோலார் மக்கள் போராட்டம் |

யார் இந்த அதிகாரி?

பெயர்: டி.கே. ரவி. வயது: 36. சொந்த ஊர்: தும்கூர் மாவட்டம் தொட்டகொப்பலு கிராமம். குடும்பம்: ஏழை விவசாயக் குடும்பம். உடன் பிறந்தவர்கள்: ஒரு தம்பி, ஒரு தங்கை.

படிப்பில் கெட்டிக்காரரான ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் குல்பர்கா, பெல்காம் ஆகிய மாவட்டங்களில் உதவி கலெக்டராக பணி புரிந்தார்.

பின்னர் 2013-ல் கோலார் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். அப்போது அங்கு மணல் கடத்தல், சாலைப் பணிகள் முறைகேடுகள், புறம்போக்கு நில அபகரிப்புகள், ஏரிகள் ஆக்கிரமிப்புகள் ஆகிய சமூக விரோத செயல்கள் மலிந்து கிடந்துள்ளன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளார் ரவி. விளைவு, கோலார் மாவட்டத்தில் பல பெரும் புள்ளிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார்.

தொடர்ந்து பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கைகளை கட்டவிழ்க்க 2014 அக்டோபரில் அவர் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். 1 வருடம் 9 மாத காலம் கோலாரில் பணி. அங்கு அவர் சம்பாதித்தது மக்கள் மனத்தையும், மணல் மாபியாக்களின் எதிர்ப்பையும். டி.கே.ரவியை பணியிட மாற்றம் செய்ததை எதிர்த்து கோலார் பகுதி மக்கள் 2 நாட்கள் மறியல் நடத்தியுள்ளனர். இதுவே அவருக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கு.

பணியிட மாற்ற உத்தரவை ஏற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி பணியில் சேர்கிறார். வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையர் பொறுப்பு. அங்கும் தொடர்கிறது அவரது அதிரடி நடவடிக்கை. வரி ஏய்ப்பு செய்யும் பெரும் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் இவர் கவனத்தில்பட ரெய்டுகள் பல நடத்தியிருக்கிறார். இவரது நடவடிக்கையால் கடந்த மூன்று மாதங்களில் கோடிக் கணக்கில் வரி வசூலாகியிருக்கிறது. நேற்றுவரை பெங்களூருவில் வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையராக பணி.

நேற்று காலை அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பியவரை பின்னர் உறவினர்கள் சடலமாகத்தான் கண்டுள்ளனர்.

'நிழல் உலக மிரட்டல்'

ரவியின் அகால மரணம் குறித்து அவரது சகோதரர் கூறும்போது, "ரவி தன் பணியில் மிகவும் நேர்மையானவர். அவருக்கு குடும்பத்தில் எவ்வித நெருக்கடியும் இல்லை. திருமணமாகிவிட்டது. அவரது மனைவி பெயர் குசும். இருவருக்கும் இடையே எந்த சச்சரவும் இல்லை.

ஆனால், மணல் மாஃபியாக்கள் மீதான நடவடிக்கை, வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மீதான நடவடிக்கை காரணமாக அவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்துவந்தது. அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன.

துபாயில் இருந்து நிழல் உலக தாதாக்கள்கூட ரவியை மிரட்டினர். ஆனால், அவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார். ரவி மன தைரியம் நிறைந்தவர். அவர் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். அவர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x